மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு - மகிழ்ச்சியில் மீனவர்கள்
தூத்துக்குடி: தமிழகத்தில் அரசு விதித்துள்ள மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவடைகிறது. இதை தொடர்ந்து கடலுக்கு செல்ல மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தயாராகி வருகின்றனர்.
ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் இந்த தடை அமுலில் உள்ளது. இநத தடை காலம் நாளை நிறைவடைகிறது.
தடை காலம் காரணமாக தூத்துக்குடியில் சுமார் 200க்கும் மேலான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த கால கட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்தல், மீன் வலைகளை பின்னுதல், படகுகளுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பல்வேறு பணிகளை செய்து வந்தனர்.
இந்த தடை காரணமாக மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்து விலை கடு்மையாக உயர்ந்து விட்டது. மேலும் இந்த தடை காலத்தில் மீனவர்களுக்கு உரிய நிவாரண தொகை அரசு இதுவரை மீனவர்களுக்கு வழங்கவில்லை என்றும் இதில் பல்வேறு மோசடிகள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் தடைகாலம் நாளை நிறைவுடைகிற நிலையில் அனைத்து விசைப்படகு மீனவர்களுக்கும் பொது விருந்து நடக்கிறது. வரும் 30ம் தேதி அதிகாலை வழக்கம் போல் மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்த ஆயத்தம் செய்யப்பட்டு வருகிறது. 45 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க செல்வதால் கடலில் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று மீனவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications