பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்த 5 செயற்கைக்கோள்கள் எவை, எவை?
சென்னை: பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் பாய்ந்த 5 செயற்கைக்கோள்கள் குறித்து பார்ப்போம்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
அந்த ராக்கெட்டில் 4 நாடுகளைச் சேர்ந்த 5 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. அதன் விவரம் வருமாறு,
பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோளான ஸ்பாட் 7 714 கிலோ எடை கொண்டது. அது பூமி குறித்த ஆய்வை மேற்கொள்ளவிருக்கிறது. அதை ஐரோப்பிய விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஏர்பஸ் டிபென்ஸ் தயாரித்துள்ளது.
ஜெர்மனி
14 கிலோ எடை கொண்ட ஜெர்மனி நாட்டு செயற்கைக்கோளான ஏஐசாட் சர்வதேச கடல் போக்குவரத்து கண்காணிப்பு குறித்து ஆய்வு செய்யும். ஜெர்மனி ஏரோஸ்பேஸ் சென்டர் தயாரித்துள்ள முதல் நானோ செயற்கைக்கோள் இது தான்.
கனடா
என்.எல்.எஸ்.7.1 மற்றும் என்.எல்.எஸ். 7.2 ஆகிய செயற்கைக்கோள்கள் கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகம், இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் ஸ்டடிஸ்/ ஸ்பேஸ் பிளைட் லபாரடரியில் தயாரிக்கப்பட்டது. தலா 15 கிலோ எடை கொண்ட இந்த 2 செயற்கைக்கோள்களும் மிகத் துல்லியமான ஜிபிஎஸ் தகவலுக்கு உதவும். இரண்டும் விண்ணில் இணையாகப் பறந்தபடி ஜிபிஎஸ் தகவல்களை அளிக்கும்.
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தயாரித்துள்ள வெலாக்ஸ்-1 செயற்கைக்கோள் இமேஜ் சென்சர், செயற்கைக்கோள்களுக்கு இடையேயான ஆர்.எப். இணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இதன் எடை 7 கிலோ ஆகும்.
19 நாடுகள்
இஸ்ரோ இதுவரை அல்ஜீரியா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கொரியா, லக்சம்பர்க், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து ஆகிய 19 நாடுகளின் 35 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.