அரசின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் வளர்மதி
சென்னை: சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவிகளை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டித் தீர்த்தது. இந்த கனமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பின. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என பொதுமக்கள் எண்ணி இருந்த நிலையில், இடைவிடாது தொடர்ந்து பெய்யத் துவங்கியதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் சென்னை நகரின் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமடைந்தன.
இந்நிலையில், வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் சேதங்களுக்கு உடனடியாக அரசின் நிவாரண உதவிகளை வழங்கிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் முழுமையாக மற்றும் பகுதியாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக வடசென்னை தெற்கு மாவட்டம் திரு.வி.க.நகர் பகுதி 70வது வார்டு மேட்டுபாளையம் அருந்ததியர் நகரில் மழை நீரினால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு வேட்டி, சேலை, போர்வை, டவல், ஆரிசி, ரொட்டி, ஆகியவைகளை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வடசென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் கே.எஸ். சீனிவாசன், வ.நீலகண்டன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.