சத்தியமங்கலம் அருகே குடோனில் பதுக்கிய 225 கிலோ பான் மசாலா பறிமுதல்
225 பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தடைசெய்யப்பட்ட 225 கிலோ பான் மசாலா பாக்கெட்டுகளை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடக்குப்பேட்டை பகுதியில் பூர்ணிமா டிரேடர்ஸ் என்ற குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனிலிருந்து தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா பாக்கெட்டுகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுவதுடன் பல்வேறு இடங்களில் புழக்கத்தில் விடுவதாகவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதன் அடிப்படையில், வடக்குப்பேட்டை பகுதியில் இயங்கி வந்த பூர்ணிமா டிரேடர்ஸ் என்ற குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, சட்டவிரோதமாக பான்மசாலா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் 225 கிலோ பான்மசாலா மற்றும் குட்கா பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. இதையடுத்து பான்மசாலா குடோனின் உரிமையாளர் சோனாராம் என்பவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, புகையிலை அல்லது நிகோடின் பொருள்களை விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் புகார் அளிக்குமாறும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பலமுறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.