பர்கூர் அருகே வனதேவதை திருவிழா.. பச்சை சேலை.. காட்டுமலர்கள், கிழங்குகள் படைத்து வினோத வழிபாடு
பர்கூர் அருகே காவல்தெய்வம் வனதேவதை திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே சுமார் இரண்டாயிரம் அடி உயரம் கொண்ட காவல்தெய்வம் வனதேவதைக்கு பச்சை சேலை அணிந்து, காட்டு மலர்கள் மற்றும் காட்டுகிழங்குகளை படைத்து மலைவாழ் மக்களின் வினோத திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சுமார் இரண்டாயிரம் அடி உயரம் கொண்ட பெரிய மலை வனப்பகுதியில் மலைவாழ் மக்களின் காவல் தேவமாக விளங்கும் வனதேவதை மற்றும் வனமுனி அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வனதேவதை திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டும் கடந்த 15 ம் தேதி வனதேவதை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பல்வேறு பூஜைகளுடன் நடைப்பெற்ற இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காட்டு மலர்களால் அரங்கரிக்கப்பட அம்மன் கரக ஊர்வலம் கொல்லப்பள்ளி இருளர்கவனி காலனியில் இருந்து தொடங்கியது. இந்த ஊர்வலம், ஜவுக்குபள்ளம், காரகுப்பம், பூமாலை நகர், ஐகுந்தம், எலிமேடு, ஐகொத்தப்பள்ளி உள்ளிட்ட 15 கிராமங்கள் வழியாக சென்று பின்னர் அடர்ந்த வனப்பகுதியின் மலை உச்சிக்கு வந்தடைந்தது,
அப்போது வழிநெடுங்கிலும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என வரிசையாக படுத்து இருந்தனர். அவர்கள் மீது கோவில் பூசாரி ஆணிகளால் செய்யப்பட்ட செருப்பால் நடந்து சென்றார். பின்னர் வனப்பகுதியில் தேன், இருளர் கிழங்கு மற்றும் காட்டு மலர்களை சேகரித்து வந்த பெண்கள் பச்சை சேலை அணிந்து வனத்தேவதைக்கு பூஜைகள் செய்தனர்.
பின்னர் இருளை கிழங்கின் மூலம் செய்த மாவிளக்கு ஏற்றி வனதேவதை வழிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசையுடன் நடனமாடி வனதேவதையை மகிழ்வித்தனர்.
இந்த வனத்தேவதை விழாவில் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, பொள்ளாச்சி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் இனமக்கள் விருத்தியடைய குடும்பத்துடன் கலந்து கொண்டு வன முனி அய்யனார் மற்றும் வனத் தேவதையை காட்டு மலர்களால் கொண்டு வழிப்பட்டு சென்றனர். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் வனதேவதை திருவிழாவின்போது சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வர தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.