முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடலுக்கு சரத்குமார், அமைச்சர்கள் அஞ்சலி
செங்கோட்டை: முன்னாள் அமைச்சரும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தூர் பாண்டியன் உடலுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இன்று அஞ்சலி செலுத்தினர். இன்று அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது
இன்று காலை அமைச்சர்கள் ரமணா, சண்முகநாLன், ராஜேந்திர பாலாஜி, முத்துலட்சுமி எம்.எல்.ஏ, கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி. லிங்கம், பார்வர்ட் பிளாக் எம்.எல்.ஏ கதிரவன் உள்ளிட்டோரும், சரத்குமாரும் அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் செந்தூர் பாணடியன். காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்சை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு அது தான் முதல் சட்டசபை தேர்தலாகும். தமிழகத்தில் அதிமுக அரசு ஆட்சி அமைத்த நிலையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பசாமி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும், அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா சட்டத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
2011ம் ஆண்டு ஜூலை மாதம் இசக்கி சுப்பையா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து செந்தூர் பாண்டியன் தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தூர் பாண்டியன் 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அறநிலையத்துறை அமைச்சாரக நியமிக்கப்பட்டார்.
உடல் நலக்குறைவு
கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செந்தூர் பாண்டியன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நினைவு திரும்பாத நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் அவரிடம் இருந்த அறநிலையத்துறை பதவி அமைச்சர் அனந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தூர் பாண்டியன் இருந்து வந்தார்.
மரணம்
7 மாத சிகிச்சை பலன் இன்றி செந்தூர் பாண்டியனின் உயிர் நேற்று காலை பிரிந்தது. அவரது உடல் பலத்த பாதுகாப்புடன நள்ளிரவு 11.30 மணிக்கு சொந்த ஊரான செங்கோட்டைக்கு வந்து சேர்ந்தது. இன்று காலை 10 மணிக்கு இறுதி சடங்கு நடக்கிறது. இதையொட்டி முக்கிய பிரமுகர்கள் செங்கோட்டையில் குவிந்த வந்த வண்ணம் உள்ளனர்.
துணை தலைவர்
முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் எம்.ஜி.ஆர். காலம் முதல் அதிமுகவில் பணியாற்றி வந்தார். செங்கோட்டை நகராட்சி தலைவராக 1986-1991ம் ஆண்டு வரையும் பின்பு 1996-2001ம் ஆண்டு வரையும் துணை தலைவராகவும் பணியாற்றினார். 2001ல் அதிமுக ஆட்சியின் போது டாம்ப்கால் தலைவராக நியமிக்கப்பட்டார். நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர், நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் உளளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்.
குடும்ப பின்னணி
செந்தூர் பாண்டியன் 3-4-1951ல் பிறந்தார். செங்கோட்டை ராமசாமி தெருவில் வசித்து வந்தார். வயது 64. வீரகேரளம்புதூர் ஜமீன் கிருஷ்ணசாமி உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தார். அவரது தந்தை பூலியப்பன். செந்தூர் பாணடியனின் மனைவி சண்முகதுரைச்சி. அவர்களுக்கு ஐயப்பராஜ், கிருஷ்ணமுரளி என்ற மகன்களும், பிரியதர்சினி என்ற மகளும் உள்ளனர். ஐயப்பராஜ் சென்னையில் வழக்கறிஞராக உள்ளார். கிருஷ்ணமுரளி செங்கோட்டை நகராட்சி கவுன்சிலராக உள்ளார். மகள் பிரியதர்சினி டாக்டராக பணியாற்றி வருகிறார். மகன், மகளுக்கு சென்னையில் முதல்வர் முன்னிலையில் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. கடையநல்லூர் தொகுதியில் 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அவர் வாங்கிய ஓட்டுகள் 80741, பீட்டர் அல்போன்ஸ் வாங்கியது 64449 வாக்குகள் ஆகும்.
ஓ.பி.எஸ்.
செந்தூர் பாண்டியன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் நேற்று பன்னீர் செல்வம் உள்பட பல அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து அவரது உடலை அவரது மகன் ஐய்யப்பராஜிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். மேலும் அதிமுக தலைமைக்கழகம் சார்பில் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
அழுகை
செந்தூர் பாண்டியனின் உடல் இறுதி சடங்குக்காக அவரது சொந்த ஊரான செங்கோட்டைக்கு நேற்று அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் இரவு 11.30க்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலைப் பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள், அதிமுகவினர், ஊர் பொதுமக்கள் கதறி அழுதனர். பின்னர் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, காமராஜ், கோகுல இந்திரா, செல்லூர் ராஜ், உதயகுமார், எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், பிரபாகரன், நட்டர்ஜி, விஜிலா சத்தியானந்த், சசிகலா புஷ்பா, வசந்தி முருகேசன், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஜக்கையன், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், மைக்கேல் ராயப்பன், நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நள்ளிரவு நேரமானாலும் எராளமானவர்கள் திரண்டுவந்து அஞ்சலி செலுத்திய
வண்ணம் இருந்தனர். இன்று செங்கோட்டையில் செந்தூர் பாண்டியன் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.