பொங்கலுக்கு முன்னர் இலவச வேட்டி சேலைகள் விநியோகம் – அமைச்சர் கோகுல இந்திரா அறிவிப்பு!
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு 3.5 கோடி வேட்டி, சேலைகள் இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலை உற்பத்தி குறித்த முன்னேற்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த ஆய்வு கூட்டத்துக்கு கைத்தறி துறை செயலாளர் ஹர்மந்தர்சிங் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.
மேலும் கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர்கள் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் கோகுல இந்திரா பேசும் போது, ‘‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது.
இதன் உற்பத்தியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அதிகாரிகள் பார்வையிட்டு பணி சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 கோடியே 46 லட்சம் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி செய்ய இலக்கு செய்யப்பட்டு உள்ளது. பணிகள் விரைவில் நடக்கிறது. பொங்கல் பண்டிகைக்குள் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்'' என்று கூறினார்.