விவசாய சங்கம் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் தமாகா பங்கேற்கும்… ஜி.கே.வாசன் அறிவிப்பு
சென்னை: விவசாய சங்கம் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்கும் என்று அதன் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கர்நாடக அரசு தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
மறுபுறம் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு ஏற்காமல் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்து தடங்கலாக செயல்படுவது தமிழக விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.
இப்படி இந்த இரு அரசும் தொடர்ந்து தமிழக விவசாயிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்க தவறியதால் சுமார் 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா சாகுபடி வீணாகக் கூடிய மோசமான நிலையும், 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாக இருக்கின்ற சூழலும் உள்ளது.
இது தொடர்பாக சென்னையில் ஏற்கனவே விவசாயக் சங்கங்களின் கூட்டியக்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமாகா கலந்து கொண்டது.
மேலும், தமிழகத்தில் வருகின்ற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் தொடர் ரயில் மறியல் போராட்டத்திற்கு தமாகா ஆதரவு தர வேண்டும் என்று விவசாயக் சங்கங்களின் கூட்டியக்கத்தின் பிரதிநிதிகள் தமாகா அலுவலகம் வந்து என்னை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்று தமாகா அந்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்து, அதில் பங்கேற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் உள்ள தமாகாவினர் தமிழக விவசாயிகளின் எண்ணங்களை மத்திய அரசுக்கு பிரதிபலிக்கும் வகையில் விவசாயக் சங்கங்களோடு இணைந்து இந்த போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று வாசன் கூறியுள்ளார்.