ஆட்சியில் பங்கு என்பது இலக்கு அல்ல: குலாம் நபி ஆசாத்
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமையவேண்டும். அதே நேரத்தில் ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரஸின் இலக்கல்ல என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத் இதனைத் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சிக்னல் கொடுத்ததன் தொடர்ச்சியாக டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கோபாலபுரம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பேச்சு வார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூட்டணியை உறுதி செய்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரஸின் இலக்கல்ல. தி.மு.க. கூட்டணியில் இணைய உள்ள வேறு கட்சிகள் குறித்து பேசுகையில், ‘வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தி.மு.க. முடிவு செய்யும் என்றார்
திமுக, காங்கிரஸ் கட்சிகள் பழமையான பாரம்பரியம் மிக்க கட்சிகள் என்று ஆசாத் தெரிவித்தார். ஏற்கனவே பலமுறை திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.