கோவையில் ரூ.2.12 லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய ஐம்பொன் நாணயங்கள் பறிமுதல்
கோவை: கோவையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ. 2.12 லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லோக்சபா தேர்தல் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 24ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கடந்த 2 நாட்களில் மட்டும் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று கோவை தடாகம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வீரபாண்டிப்புதுாரைச் சேர்ந்த செங்கல்சூளை உரிமையாளர் திவாகரின்(31) காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் ரூ.1.50 லட்சம் சிக்கியது. இது தவிர வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த செல்வகுமாரிடம்(40) இருந்து ரூ.1 லட்சம், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த உமரிடம்(51) இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் ஆகும்.
மேலும் காமாட்சிபுரம் சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடந்தது. அப்போது திருப்பூர், பொங்கலூரைச் சேர்ந்த சிவநாதன்(43) என்பவர் ஓட்டி வந்த காரை மறித்து சோதனை செய்யப்பட்டது. அப்போது காரில் இருந்த ரூ.2.12 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன்னால் ஆன தங்க முலாம் பூசிய 1, 890 நாணயங்கள் சிக்கின.
தான் கோவை, பொன்னையராஜபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், நாணயங்களை ஒருவருக்கு சப்ளை செய்ய செல்வதாகவும் சிவநாதன் தெரிவித்தார். ஆனால் அவரிடம் நாணயங்களுக்கான ஆவணம் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.