பெங்களூர்-நாகர்கோவில் தினசரி ரயில் பிப்ரவரி 2ம் தேதி முதல் இயக்கம்: பெங்களூர் கோட்ட அதிகாரி தகவல்
குமரி மற்றும் நெல்லை மாவட்டத்திலிருந்து பெங்களூர் மற்றும் ஓசூருக்கு மதுரை வழியாக தினசரி ரயில் வசதி இல்லாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். கடந்த 15 ஆண்டுகளாக நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பது தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கை ஆகும். பல ஆண்டு கடுமையான போராட்டத்துக்கு பின் தென் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வேத்துறை நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு கடந்த ஆண்டு ரயில் பட்ஜெட்டில் நாகர்கோவில் - பெங்களூர் வழித்தடத்தில் புதிய தினசரி ரயில் நாமக்கல் வழியாக அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து ஜுலை மாதம் வெளியிடப்பட்ட ரயில்கால அட்டவணையில் இந்த தினசரி ரயில் இயங்கும் கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த மற்ற ரயில்களில் ஒரு சில ரயில்களை தவிர அனைத்தும் இயக்கப்பட்டுவிட்டது. ஆனால் தென்தமிழ்நாட்டு பயணிகளுக்கு அதிக அளவு உபயோகப்படுத்தும் இந்த பெங்களூர் தினசரி ரயில் 11 மாதங்கள் ஆகியும் இதுவரையிலும் இயக்கப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இயங்கி வந்த வாராந்திர ரயிலின் சேவையையும் ரயில்வே நிர்வாகம் கடந்த வாரத்துடன் நிறுத்தியது. இவ்வாறு நிறுத்திய உடன் பயணிகள் இந்த தினசரி ரயில் உடனடியாக இயக்கப்படும் என்று எதிர்பார்த்தனர்.
இது குறித்து பெங்களூர் கோட்ட அதிகாரிகளை கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த தினசரி ரயிலின் இயக்கம் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெரிவித்தார். பிப்ரவரி இரண்டாம் தேதி துவக்க விழா சிறப்பு ரயிலும், மூன்றாம் தேதி முதல் சதாரண சேவையும் இயங்கும். பொதுவாக பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு மிகக்குறைந்த அளவு இரவு நேர ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதிலும் சென்னையை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் என மைசூர்- மயிலாடுதுறை, மைசூர் - தூத்துக்குடி என இரண்டு ரயில்கள் மட்டுமே உள்ளது. மூன்றாவது ரயிலாக நாகர்கோவில்-பெங்களூர் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் பெங்களூரிலிருந்து தினசரி மாலை 5 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் கன்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 7:50 மணிக்கு வந்தடைகிறது.
மறுமார்க்கம் நாகர்கோவிலில் இருந்து தினசரி மாலை 4:25 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு காலை 9:05 மணிக்கு போய் சேருகிறது. இந்த ரயில் தமிழகத்தில் உள்ள கடைசி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 11 மாவட்டங்கள் வழியாக பயணித்து இந்த 11 மாவட்ட பயணிகளுக்கு பெங்களூர் செல்லத்தக்க வகையில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 2 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியும், ஓர் குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டியும், 5 முன்பதிவில்லாத பெட்டிகள் என மொத்தம் 17 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலின் பயணிகளின் வரவேற்பை பொறுத்து பெட்டிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 24 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சேலம் செல்ல வசதி:
தென் மாவட்டங்களிலிருந்து சேலம் செல்ல பல்வேறு ரயில்கள் இருந்தாலும் அதிகாலையில் செல்லத்தக்க எந்த ரயில் வசதியும் இல்லை என்று தென்மாவட்ட பயணிகளுக்கு மனகுமுறலாகவே இருந்தது. இந்த பெங்களூர் ரயில் இரண்டு மார்க்கங்களிலும் சேலம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது.
கூடுதல் நிறுத்தங்கள்:
இந்த நாகர்கோவில் - பெங்களூர் ரயில் தமிழகத்தில் உள்ள ராசிபுரம், பெங்களூர் புறநகரில் உள்ள பெங்களூர் கிழக்கு, கரமேலரகம் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால அட்டவணையில் மாற்றம்:
இந்த ரயில் தற்போது பெங்களூருக்கு காலை 9:05 மணிக்கு செல்லும் என்று கால அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. 11 மாவட்ட பயணிகள் பெங்களூர் செல்லத்தக்க வசதியாக இந்த ரயிலின் கால அட்டவணையை மாற்றம் செய்து பெங்களூரில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் பயணிகள் நலன் கருதி காலை 7:30மணிக்கு பெங்களூர் செல்லத்தக்க கால அட்டவணையை மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்றும் ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இன்டர்சிட்டி ரயில்கள்
நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு கடந்த 15 ஆண்டகளாக போராடி இந்த வருடம் புதிய ரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. பெங்களூரிலிருந்து தமிழக பகுதிகளான ராமேஸ்வரம், கோவை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு தினசரி இரவு நேர ரயில்களும் மதுரை மற்றும் திருச்சிக்கு பகல்நேர இன்டர்சிட்டி ரயில்களும் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை வலுத்து வருகிறது.