வனத்துறையினரின் அனுமதி பெறாமல் மலை ஏறினால் கடும் நடவடிக்கை - முதல்வர்
வனத்துறையினரின் அனுமதி பெறாமல் மலையேற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: வனத்துறையினரிடம் முறையான அனுமதியோ, பயிற்சியோ இல்லாமல் வனப்பகுதி, மலைப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் 36 பேர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவிகள், ஐடி ஊழியர்கள், சிறுவர்களும் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகலில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அனைவரும் சிக்கினர்.
இரவு பகலாக மீட்பு பணிகள் நடைபெற்றது. இதில் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களில் சிலருக்கு 100 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. தீ பரவிய உடன் உயிரை காப்பாற்றிக்கொள்ள பள்ளத்தில் குதித்த 9 பேர் உயிரிழந்து விட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தீ விபத்து குறித்து அறிந்து மன வேதனை அடைந்தேன். 39 பேர் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூரில் இருந்து மலையேற சென்றனர். அவர்களில் 3 பேர் திரும்பிய நிலையில் 36 பேர் மலையேறியுள்ளனர். தீ விபத்தில் சிக்கிக்கொண்டனர்.
கோடை காலத்தில் வன விலங்குகள் தண்ணீர் தேடி வரும் என்பதால் மலை ஏற்ற பயிற்சிக்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லை. மரங்கள், புற்கள் காய்ந்து தீ விபத்து ஏற்படும். இது போன்ற ஆபத்தான காலங்களில் வனப்பகுதிக்கு செல்லக்கூடாது.
நேற்றைய தினம் மலையேற சென்றவர்கள் அனுமதி பெறாமல் சென்றதே துயரத்திற்குக் காரணம்.
வனத்துறையினரின் அனுமதி பெறாமல் மலையேற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறையான பயிற்சி இல்லாமல் மலையேற்றத்தில் ஈடுபட்டதே 9 பேர் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டது.
இனி இது போன்ற பயிற்சியில் ஈடுபடுபவர்கள் முறையான அனுமதியோடுதான் செல்ல வேண்டும். தீ விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
போர்க்கால அடிப்படையில் தீயணைப்புத்துறை,வனத்துறை அதிகாரிகள் போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் கூறினார். தீ விபத்தில் காயமடைந்தவர்களை பார்க்கவும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறவும் மதுரைக்கு செல்கிறேன் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.