முதல்வரை நீங்கதானே மாற்ற முடியும்.... தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் கைவிரித்த ஆளுநர்
முதல்வரை மாற்றும் அதிகாரம் தமக்கு இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் வெளிப்படையாக கைவிரித்துவிட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
சென்னை: முதல்வரை எம்.எல்.ஏக்கள்தானே மாற்ற முடியும்.. தம்மால் எதுவும் செய்ய முடியாது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் கூறியிருக்கிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், முதல்வர் எடப்பாடியாருக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் தந்தனர். ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தனித்தனியே கடிதம் தந்தனர்.
கைவிரித்தார் ஆளுநர்
இந்த கடிதங்களைப் பெற்றுக் கொண்ட ஆளுநர், மாநிலத்தின் முதல்வர் என்பவரை எம்.எல்.ஏக்கள்தானே தேர்வு செய்ய முடியும். முதல்வரை மாற்றும் அதிகாரம் தமக்கு இல்லை என கைவிரித்திருக்கிறார். மேலும் எம்.எல்.ஏக்கள் கூடி முடிவு செய்யுங்கள் பார்க்கலாம் எனவும் கூறி அனுப்பி வைத்துள்ளார்.
ஒப்புக் கொண்ட தங்க தமிழ்செல்வன்
இதனை நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வனும் உறுதி செய்தார். எம்.எல்.ஏக்கள்தான் முதல்வரை மாற்ற முடியும் என தெரிந்தும் அரசியல் பரபரப்புக்காகவே இப்படி ஒரு வீண் கடிதத்தை ஆளுநரிடம் தினகரன் தரப்பு கொடுத்திருக்கிறது என்பது அதிமுகவினர் குற்றச்சாட்டு.
இருப்புக்காக கடிதம்
மேலும் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் தங்களது இருப்பை காட்டவே இப்படி ஒரு கடிதம் கொடுத்தனர் என்று அதிமுக எம்.பி. அன்வர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரத்தில் கர்நாடகா விவகாரங்களையெல்லாம் சுட்டிக்காட்டி சட்ட வல்லுநர்களால் தெளிவாகவே தயாரிக்கப்பட்டதுதான் இந்த அறிக்கை என்கிறது தினகரன் தரப்பு.
மைத்ரேயனுடன் சந்திப்பு
இந்த கடிதத்தை வாங்கிய கையுடன் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயனை சந்தித்தார் ஆளுநர். பின்னர் உடனடியாக மும்பைக்கு கிளம்பி சென்றுவிட்டார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.