மது தாக்கம் அறியும் குழு- நீங்கள் அமைக்கிறீர்களா? நாங்கள் உத்தரவிடட்டுமா? -அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
சென்னை: தமிழகத்தில் மதுவினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை அறிய நாங்களே குழுவினை ஏற்படுத்தட்டுமா என அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது ஹைகோர்ட்.
உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள அறிக்கைபடி மாநில அரசு ஆல்ஹகாலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழுவை அமைக்காவிட்டால், நீதிமன்றமே ஒரு குழுவை ஏற்படுத்துமென தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு. அவர், ஆல்கஹால் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள, டபிள்யூ.ஹெச்.ஓ செய்துள்ள பரிந்துரைகளை ஆய்ந்து நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்செய்தார்.
அவர் தன் வாதத்தில், "மாநிலத்தில் மது மற்றும் அதிகரித்துவரும் மதுவிற்பனை குறித்தும் அரசு முறையாகத் திட்டமிட்டு கொள்கைகள் எதுவும் வகுக்கவில்லை. 2008-09ல் 10,601 கோடி ரூபாயாக இருந்த மதுவிற்பனை 2012-13ல் 21,680 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதனால் மாநிலத்தில் மதுவின் தாக்கமும் அதனோடு தொடர்புடைய பிரச்சினைகளும் அதிகரித்திருக்கின்றன" என்றும் குறிப்பிட்டார்.
இவ்வழக்கை விசாரித்த முதல் அமர்வின் தலைமை நீதிபதியான எஸ். கே.கெளலும், நீதிபதி சுந்தரேஷும், "அரசுக்கு நாங்கள் கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறோம். இல்லையெனில் நாங்களே ஒரு குழுவை ஏற்படுத்த நேரும். வரும் ஜூன் 15க்குள் அரசு மதுவின் தாக்கம் பற்றி ஆராய ஒரு குழுவை ஏற்படுத்தவேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை ஜூன் 17க்கு ஒத்திவைத்தனர்.