நஷ்டஈடு வழங்காமல் இழுத்தடிப்பு - அரசு பேருந்து ஜப்தி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே விபத்தில் காயம் அடைந்தவருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மாரிசாமி. இவர்கள் கடந்த 15-8-1997ல் கட்டாங்குளத்திற்கு லாரியில் சென்றனர். லாரி கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரை கடந்து சென்று கொண்டிருந்த போது மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் மீது லாரி மோதியது. இதில் பலர் பலியாகினர். மாரிசாமி காயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த மாரிசாமி தனக்கு விபத்து நஷ்ட ஈட்டு தொகை வழங்க கோரி சங்கரன்கோவில் சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி கடந்த 9-10-2006ல் மாரிசாமிக்கு நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகம் ரூ.74200 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன் பின்னரும் தொகை வழங்கப்படவில்லை. பின்னர் அவர் நிறைவேறுதல் மனுவை தாக்கல் செய்தார்.
அதன்படி கடந்த 19-6-2012 அன்று ரூ.1.15 லட்சம் நஷ்ட ஈடு தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டும் தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ.1.29 லட்சம் ஆகியும் தொகை வழங்கப்படாததால் சங்கரன்கோவில் சப் கோர்ட் நீதிபதி சரவணகுமார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் டெப்போவுக்கு சொந்தமான தேனியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ஒரு பஸ்சை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி சங்கரன்கோவில் சப் கோர்ட் அமீனா கோகிலா தலைமையில் பணியாளர்கள் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்துக்கு சென்று குமுளியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பேருந்தில் வந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு பிறகு வேறு பேருந்தில் புறப்பட்டு சென்றனர்.