ஊழல் வழக்கு: அன்புமணி ராமதாஸ் மீதான விசாரணைக்கு தடை விதிக்க டெல்லி ஹைகோர்ட் மறுப்பு
டெல்லி: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கையில் முறைகேடாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய அவரின் கோரிக்கையை ஏற்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது உத்தரபிரதேசத்தில் ரோஹில்கந்த் மருத்துவக் கல்லூரி
மருத்துவமனை மற்றும் இந்தூரில் இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்திற்கு முறைகேடாக அனுமதி அளித்ததாக அவர் உள்பட 9 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிபிஐ அன்புமணி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தன் மீதான குற்றப்பத்திரிக்கையை நிராகரிக்குமாறும், விசாரணைக்கு தடை விதிக்குமாறும் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அன்புமணி ராமதாஸின் மனு இன்று நீதிபதி சுரேஷ் கெய்ட் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார்.
மேலும் இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்புமணி மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது என்று சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்திபா பெஹுரா வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.