கிரானைட் முறைகேடு: டிசம்பர் 3 முதல் மதுரையில் சகாயம் "வேட்டை" ஆரம்பம்
சென்னை: மதுரையில் நடைபெற்றுள்ள கிரானைட் கொள்ளை குறித்தவிசாரணையை வரும் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் சகாயம் தொடங்க உள்ளார். இது குறித்து அவர் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான கிரானைட் குவாரிகளால், அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் செயல்பட்டது குறித்தும், அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும் விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனுதாக்கல் செய்திருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மதுரை ஆட்சியராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைக்கிறோம். இந்த விசாரணை கமிட்டி, கிரானைட் முறைகேடு குறித்த அனைத்து அம்சங்களையும் விசாரணை நடத்தி, அறிக்கையை அக்டோபர் 28ஆம் தேதிக்குள் இந்த உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை கடந்த 18ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். அப்போது நீதிபதிகள், ‘அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில், இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி சகாயத்துக்கு குவாரிகள் முறைகேடு தொடர்பான விஷயங்கள் முழுவதுமாக தெரியும். அதனால்தான் அவரை இந்த நீதிமன்றம் விசாரணை நடத்த நியமித்தது. உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் காலதாமதம் செய்துள்ளீர்கள். எனவே, இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்கிறோம். அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
சகாயத்தை அவர் தற்போது வகிக்கும் பதவியிலிருந்து 4 நாட்களில் விடுவித்து, அவர் தலைமையில் குழுவை அமைக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும், பாதுகாப்பையும் அரசு செய்து தரவேண்டும். இதில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டாலோ, அவர் கோரும் உதவி கிடைக்கவில்லை என்றாலோ சகாயம் உயர் நீதிமன்றத்தை அணுகலாம். வழக்கு டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்றனர்.
இதைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சார்பாக வக்கீல் நாகசைலா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றினை கடந்த சில தினங்களுக்கு முன்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார். மதுரையில் நடந்த கிரானைட் குவாரி முறைகேடு குறித்து மட்டும் விசாரணை நடத்த வேண்டுமா அல்லது தமிழகம் முழுவதும் உள்ள கனிம வள முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டுமா என்று தெரியவில்லை. எனவே, உயர் நீதிமன்றம் இதில் எனக்கு தெளிவுபடுத்த வேண்டும். நான் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே விசாரணைக் குழுவில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பாக மட்டுமே சகாயம் தற்போது விசாரிக்க வேண்டும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டனர்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து கிரானைட் முறைகேடு குறித்து டிசம்பர் 3ஆம் தேதி விசாரணையை தொடங்குகிறார் சகாயம். இதுகுறித்து சகாயம் மதுரை ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விசாரணைக்குத் தேவையான அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் சகாயம் வலியுறுத்தியுள்ளார். விசாரணை தொடர்பாக டிசம்பர் 1 ஆம் தேதி சென்னை வருமாறு 2 அதிகாரிகளுக்கு சகாயம் அழைப்பு விடுத்துள்ளார்.
டிசம்பர் முதல் மதுரையில் சகாயம் தனது வேட்டையை தொடங்க உள்ளதால் கிரானைட் கொள்ளையர்கள் பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications