இதோ ஜிஎஸ்டியின் உண்மை முகத்தை எளிதாக அம்பலப்படுத்தும் ஹோட்டல் பில்... பாருங்க மக்களே!
நீங்க ரூ5,000 ஹோட்டலில் சாப்பிட்டால் கூடுதலாக ரூ1,000 ஜிஎஸ்டி வரியாக கட்ட வேண்டும்ம்.
சென்னை: ஹோட்டல்களில் ரூ.5000-த்துக்கு சாப்பிட்டால் கூடுதலாக ரூ1,000 ஜிஎஸ்டி பில் போடப்படுகிறது...இதுதான் ஜிஎஸ்டியின் தாக்கம் என்கிற தகவல்கள் சமூக வலைதலங்களில் வைரலாக பரவுகிறது.
ஒரே வரி, ஒரே நாடு, ஒரே தேசம் என்ற குறிக்கோளுடன் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாகியது. இது ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இதனால் விலைவாசி உயராது என்று மத்திய அரசு சப்பைக் கட்டு கட்டினாலும் விலை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றனர். ஒரு ஹோட்டலில் உணவு உண்ட பின்னர் அதில் மொத்த தொகையில் ஜிஎஸ்டி கணக்கிடப்படுகிறது.
தலப்பாகட்டி பில்
தலப்பாகட்டியில் 28 ஐட்டங்களை உண்டதற்கு ரூ.5056 என எந்த வரியும் இல்லாமல் ஆகியுள்ளது. இதில் மாநில அரசுக்கு 9 சதவீதமும், மத்திய அரசுக்கு 9 சதவீதமும் என 18 சதவீதம் வரி சேர்த்து ஜிஎஸ்டி மட்டும் ரூ.910 வசூலிக்கப்பட்டுள்ளது.
முன்னர் இருந்தது
முன்னெரெல்லாம் நாம் வாங்கும் பொருள்களுக்கு வாட் 2 சதவீதமும், சேவை வரி 6 சதவீதமும் வசூலிக்கப்பட்டு வந்தன. இதனாலும் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த தலப்பாகட்டி ரசீதுக்கு ஜிஎஸ்டி அறிமுகத்துக்கு முன்னர் நாம் எவ்வளவு செலுத்தியிருப்போம் என்பதை பார்ப்போம்.
ஜிஎஸ்டி-க்கு முன்...
ரூ. 5056-இல் ரூ. 2 சதவீதம் வாட் வரி என்றால் ரூ.101.12 ஆகும். 6 சதவீதம் சேவை வரி என்றால் ரூ.303.36 ஆகும். இவை அனைத்தையும் கூட்டினால், ரூ.5460.48, ரவுண்டாக ரூ.5460 வசூலிக்கப்பட்டிருக்கும். இதில் வசூலிக்கப்பட்ட வரி ரூ.404.48 மட்டுமே.
ஜிஎஸ்டி-க்கு பின்...
ரூ.5056-க்கு 9 சதவீதம் மாநில ஜிஎஸ்டி ரூ.455.04, மத்திய ஜிஎஸ்டி ரூ.455.04 என சேர்த்து மொத்தம் ரூ.5966 பெற்றுக் கொண்டனர். ஜிஎஸ்டிக்கு முன்னும், ஜிஎஸ்டிக்கு பின்னும் உள்ள வித்தியாசத்தை கணக்கிட்டால் ஜிஎஸ்டிக்கு பின்னர் ரூ. 505 அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை நாம் உண்ணும் உணவின் தொகைக்கேற்ப மாறுபடும்.
2 பிரியாணி
ஜிஎஸ்டி என்ற பெயரில் கூடுதலாக வசூலித்த ரூ. 505-இல் அதே தலப்பாகட்டியில் இரு பிரியாணி வாங்கலாம் என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜிஎஸ்டி யால் விலை ஏறாது என்று மத்திய அரசு எந்த அர்த்தத்தில் கூறியது என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.