கருணாநிதி- குலாம்நபி ஆசாத் சந்திப்பில் உதயமான திமுக- காங். கூட்டணி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று சந்தித்து சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் - தேமுதிக கூட்டணி ஏற்படலாம் என்கிற நிலைமை உருவாகி உள்ளது. காஞ்சிபுரத்தில் வரும் 20-ந் தேதி தேமுதிகவின் மாநாட்டில் கூட்டணி குறித்து இறுதி முடிவை விஜயகாந்த் அறிவிக்க இருக்கிறார்.
வரவேற்ற ஸ்டாலின், கனிமொழி
இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு இன்று காலை 11.30 மணிக்கு குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்றனர். அவர்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
குலாம்நபியை ஆரத்தழுவிய கருணாநிதி
பின்னர் குலாம்நபி ஆசாத் கருணாநிதியை சந்தித்தார். அவருக்கு குலாம் நபி ஆசாத் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவரை கருணாநிதி கட்டித் தழுவிக் கொண்டார். அப்போது குலாம்நபி ஆசாத் காதில் கருணாநிதி ஏதோ கிசுகிசுத்தார்.
கூட்டணி பேச்சு
பின்னர் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தினர். இதில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கோபிநாத் எம்.எல்.ஏ. ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற விரும்புவதை குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். இதை கருணாநிதியும் ஏற்றுக் கொண்டார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குலாம்நபி ஆசாத், திமுக- காங்கிரஸ் கூட்டணி உருவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுகவும் இடம்பெற்றிருந்தது. 2013-ஆம் ஆண்டு காங்கிரஸுடனான உறவை முறித்துக் கொண்டு மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறியது. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவில்லை. தற்போது இரு கட்சிகளிடையே மீண்டும் கூட்டணி உருவாகியுள்ளது.