டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய வழக்கு தள்ளுபடி
நாமக்கல்: திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஎஸ்பி-யாக இருந்த விஷ்ணுபிரியா, கடந்த ஆகஸ்ட் 18ம் தேதியன்று அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால்தான் விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார் என்று அவரது தோழியும், கீழக்கரையில் டிஎஸ்பியாக பணிபுரியும் மகேஸ்வரியும் கூறினார். மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய விஷ்ணு பிரியாவின் பெற்றோர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சிபிசிஐடி விசாரணை
இந்த நிலையில் விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க அரசு உத்தரவிட்டது. அதேபோல தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காதல் பிரச்சினையா
விஷ்ணுபிரியாவிடம் அடிக்கடி செல்போனில் பேசியவர்கள், விஷ்ணுபிரியாவின் தோழிகள் மற்றும் போலீசார் சிலரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. காதல் பிரச்சினையில் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என்று கதைகட்டப்பட்டது. அதற்கேற்றார் போல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் மாளவியா, திருக்கோஷ்டியூர் கோவில் அர்ச்சகர் விஜயராகவன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
சிபிஐ விசாரணை கோரிக்கை
தற்கொலை வழக்கின் விசாரணை திசைமாறுவதை அறிந்த பெற்றோர், விஷ்ணுபிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் இதேபோல சிபிஐ விசாரணை கோரி கோரிக்கை விடுத்தனர்.
தந்தை மனு தாக்கல்
இந்நிலையில், விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், எனது மகள் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. காவல்துறை உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் இறந்திருக்கிறார். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
ஹைகோர்டில் விசாரணை
எனவே விஷ்ணு பிரியாவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரணை நேர்மையாக இருக்காது என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரினார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா முன் கடந்த 25ம் தேதி விசாரணைக்கு வந்தது.
சிபிஐ விசாரணை தேவையில்லை
டிஎஸ்பி தற்கொலை வழக்கில், சிபிஐ விசாரணை தேவையில்லை என்று சிபிசிஐடி தரப்பில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
வழக்கு தள்ளுபடி
இன்று ஹைகோர்ட்டில் வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, சிபிசிஐடி விசாரணை அறிக்கையின் படி நேராக செல்வதாகவும், ஏற்கனவே சிபிஐ விசாரணைக் கோரி அவரது நண்பர் மாளவியா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிட்டார்.