முதல்ல 16 ஆயிரம் தமிழக சிலைகளை நீக்குங்கள்... அப்புறமா சிவாஜி சிலையைத் தொடலாம்!
சென்னை: தமிழகத்தில் இடையூறு விளைவிக்கும் 16 ஆயிரம் சிலைகளை அகற்றுவது குறித்து விளக்கமளிக்கமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பொது இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள், சாதித் தலைவர்களின் சிலைகளை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தமிழகத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகள் பொது இடங்களிலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்டறிந்து அகற்ற ஒரு குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் ரமேஷ் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுதாகர் மற்றும் வேலுமணி ஆகியோர், இதுகுறித்து நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.