நீர்நிலைகளை காக்கவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்... கலெக்டர்களுக்கு ஹைகோர்ட் நீதிபதி அட்வைஸ்!
நீர்நிலைகளை காக்கவும் நேரம் ஒதுக்குங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான 13 மாவட்ட ஆட்சியர்களை நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னை : நீர்நிலைகளை காக்கவும் நேரம் ஒதுக்குங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் சண்முகசுந்தரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 2009ம் ஆண்டு உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவை அமல்படுத்த கோரிக்கை விடுத்திருந்தார்.
ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள பெரும்பள்ள ஓடையில் அக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் சண்முக சுந்தரம் மனுவில் வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக 19 மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அறிக்கை தாக்கல் செய்யாத 13 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், டீக்காராமன் அகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரிஇ நாகப்பட்டினம், கரூர், தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல், நீலகிரி ஆகிய 13 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகினர்.
பொறுப்புடன் செயல்பட வேண்டும்
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை பாதுகாக்க பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நீர்நிலைகளை மீட்க வேண்டும் என்றும் கூறினர்.
நடவடிக்கை எடுங்கள்
உங்களது வழக்கமான பணிகளுக்கு இடையே இயற்கையை காக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரிய நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் பதிலளிக்காத நிலையில் அவர்கள் மீது கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆஜராக வேண்டாம்
மாவட்ட வருவாய் அதிகாரிகளின் ஆட்சேபமின்மை சான்றிதழ் இல்லாமல் அரசு நிலங்களை சார்பதிவாளர்கள் பதிவு செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த விசாரணைகளில் இருந்து ஆட்சியர்கள் ஆஜராக நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
நீதிமன்றம் துணை நிற்கும்
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.