தீபாவளிக்கு 3 நாள் லீவ் கேட்டு வழக்கு போட்ட வக்கீல்- ஹைகோர்ட் பெஞ்ச் தள்ளுபடி
தீபாவளி 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை: தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர்17 மற்றும் அக்டோபர்19 தேதிகளை அரசு விடுமுறையாக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களையொட்டி பண்டிகை நாட்கள் வந்தால், 1 அல்லது 2 நாட்கள் விடுப்பு எடுத்து மொத்தமாக 4 முதல் 5 நாட்கள் வருமாறு அரசு ஊழியர்கள் லீவு எடுத்து கொள்கின்றனர்.
இந்தாண்டு தீபாவளி புதன் கிழமை வருவதால் பெரும்பாலான அரசு அதிகாரிகள் பலரும் திங்கட் கிழமை தொடங்கி அடுத்து வந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 2 நாட்களும் விடுப்பு எடுத்து மொத்தம் 7 நாட்கள்வரை விடுமுறையாக மாற்றி லீவு எடுத்து கொள்கின்றனர். இதனால் அரசு அலுவலக பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
அக்டோபர் 18ஆம் தேதி ஒருநாள் மட்டுமே தீபாவளி பண்டிகைக்காக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஆனால் வெளியூரில் பணிபுரியும் பலரும் சொந்த ஊர் செல்வதால், திங்கட்கிழமையும், புதன்கிழமையும் விடுமுறை கேட்டு வருகின்றனர்.
இதனையடுத்து தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர்17 மற்றும் அக்டோபர்19 தேதிகளை அரசு விடுமுறையாக அறிவிக்க கோரி வக்கீல் பாஸ்கரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் பாஸ்கரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.