ஸ்டாலினுக்கு பிஏவாக ஆதிசேஷனையே நியமிக்க வேண்டும் - ஹைகோர்ட் அதிரடி
எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு பிஏவாக மீண்டும் ஆதிசேஷனையே நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சருக்கு நிகரான சலுகைகள் உண்டு. அரசு தரப்பில் ஒரு நேர்முக உதவியாளர், உதவியாளர், கார், டிரைவர் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி ஸ்டாலினுக்கு நேர்முக உதவியாளராக சட்டசபை செயலகத்தில் துணைச் செயலாளராக பணிபுரிந்த ஆதிசேஷன் நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 17ம்தேதி சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு சென்ற மு.க.ஸ்டாலினை போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுநாள் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் அருகே போட்டி சட்டசபை கூட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இந்த போராட்டத்தின் போது மு.க.ஸ்டாலினுடன் நேர்முக உதவியாளர் ஆதிசேஷன் நின்று கொண்டிருந்ததாக உளவுப்பிரிவு போலீசார் அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்தனர். இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் பதவியில் இருந்து ஆதிசேஷன் விடுவிக்கப்பட்டார். எம்.எல்.ஏக்கள் ஹாஸ்டலுக்கு அனுப்பப்பட்டார் ஆதிசேஷேன். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தன்னுடைய சிறப்பு தனி உதவியாளராக பணியாற்றிய ஆதிசேஷன் என்பவரை அப்பதவியில் இருந்து விடுவித்தது மட்டுமல்லாமல், அவரை பதவி இறக்கமும் செய்து தமிழக சட்டசபை செயலாளர் கடந்த ஆகஸ்டு 22ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஆதிசேஷனை மீண்டும் எனக்கு தனி உதவியாளராக நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு பிஏவாக மீண்டும் ஆதிசேஷனையே நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications