உங்களிடம் ஏதோ உள்நோக்கம் உள்ளது - அன்பழகன் மனுவை டிஸ்மிஸ் செய்த கர்நாடக ஹைகோர்ட்
பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரிய மனுவை நிராகரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கிலிருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரிக்க மறுத்த நீதிபதி எஸ்.அப்துல் நசீர் அகமது, ஜெயலலிதா வழக்கை விசாரிக்கும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையிலான சிறப்பு அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் அன்பழகனின் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் பைரரெட்டி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அதிமுக அரசு நியமித்தது தவறு
விசாரணையின்போது, திமுக தரப்பு வழக்கறிஞர் சி.வி.நாகேஷ் வாதிடும்போது, "கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரையின்படி கர்நாடக அரசு நீதிபதியையும், அரசு வழக்கறிஞரையும் நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை நியமித்துள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே பவானி சிங்கை உடனடியாக அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "சொத்துக்குவிப்பு வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசு வழக்கறிஞரை மாற்றினால் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்படும்.
இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு ஆணை வெளியிடவில்லை என்ற அக்கறையை விட, அன்பழகன் தரப்புக்கு வேறு ஏதோ உள் நோக்கம் இருக்கிறது" என்றார்.
இதையடுத்து, பவானி சிங்கின் வழக்கறிஞர் செபாஸ்டியன் வாதிடும்போது, "உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கர்நாடக அரசு பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது. எனவே மேல் முறையீட்டுக்கு தனியாக அரசாணை வெளியிட தேவையில்லை. மேலும் கீழ் நீதிமன்றத்தில் இவ்வழக்கில் வெற்றிப் பெற்றதன் மூலம் பவானி சிங் நேர்மையானவர் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அன்பழகன் தரப்பின் குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்த வேண்டாம்" என்றார்.
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.எல்.என்.ராவ், "இவ்வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க சட்டப்பிரிவு 24(1)-ன்படி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. இதில் எவ்வித விதிமுறையும் மீறப்படவில்லை" என்றார்.
அப்போது கர்நாடக அரசின் சார்பாக ஆஜரான அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார், "சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் எந்த வழிகாட்டுதலையும் வழங்க வில்லை. அதனால் பவானி சிங் அரசு வழக்கறிஞர் பதவியை தொடர கர்நாடக அரசு எவ்வித உத்தரவும் வெளியிடவில்லை" என்றார்.
கோரிக்கை நிராகரிப்பு
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் பைரரெட்டி, "ஜெயலலிதாவின் மேல் முறை யீட்டு மனுவை நாள்தோறும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு அமர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதில் அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து எவ்வித வழி காட்டுதலையும் குறிப்பிடவில்லை. வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என கூறியிருக்கும் வேளையில், அன்பழகன் தரப்பில் அரசு வழக்கறிஞரை நீக்கக் கோரும் மனுவை ஏற்க முடியாது. எனவே வழக்கை தாமதப்படுத்த திமுக முயலக்கூடாது.
எனவே அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் நியமனம் குறித்து மனுதாரர் அன்பழகனோ, கர்நாடக அரசோ உச்ச நீதிமன்றத்தை அணுகி தெளிவான வழிக்காட்டு தலை பெறலாம். அதன்பிறகு சர்ச்சைக்களுக்கு இடம் தராமல் கர்நாடக அரசு, பவானி சிங் நியமனம் தொடர்பாக உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும்" என்றார். இதனை தொடர்ந்து அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்ககோரும் க.அன்பழகனின் மனு முடித்து வைத்தனர்.
அரசு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து பவானி சிங்கை நீக்கக் கோரும் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்ததால், ஓரிரு நாட்களில் உச்ச நீதிமன்றத்தை அணுக போவதாக திமுக தரப்பு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு வழக்கு
இந்தநிலையில், தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை 9-வது நாளாக நேற்று நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் வாதாடினார்.
போயஸ் கார்டனில் உள்ள 2 கட்டிடங்கள், ஹைதராபாத்தில் உள்ள கட்டிடத்தின் மதிப்பு ரூ.3.62 கோடி தான். ஆனால் அந்த கட்டிடங்களின் மதிப்பை ரூ.13.64 கோடியாக உயர்த்தி காட்டி உள்ளனர். இது தவறான மதிப்பீடு ஆகும்,'' என்று வாதிட்டார்.
இதையடுத்து, தனி நீதிபதி குமாரசாமி விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.