உள்ளாட்சி தேர்தல் உத்தேச அட்டவணையை ஆக.1ல் தாக்கல் செய்ய உத்தரவு - தீர்ப்பு ஒத்திவைப்பு
உள்ளாட்சி தேர்தல் உத்தேச அட்டவணையை ஆகஸ்ட் 1ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான உத்தேச காலஅட்டவணையை ஆகஸ்ட் 1ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தக் கோரி திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான உத்தேச காலஅட்டவணையை ஜூலை 26ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் மாநில தேர்தல்ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்துவது சாத்தியமல்ல என்று அப்போது தேர்தல் ஆணையம் கூறியது.
இதனையடுத்து உத்தேச அட்டவணை தாக்கல் செய்யும் பட்சத்தில் அதற்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி வழக்கு விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வார்டுகளை வரையரை செய்ய 6 மாதம் ஆகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க 50 நாட்கள் தேவை என்றும் வாதிடப்பட்டது.
அதே நேரத்தில் வார்டுகளை வரையரை செய்தாலும் செய்யாவிட்டாலும் தேர்தல் நடத்த வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது.
இதனையடுத்து ஆகஸ்ட்1ஆம் தேதி உத்தேச தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து தேதி குறிப்பிடப்பாமல் தீர்ப்பினை ஒத்திவைத்தனர்.