தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கு ஜார்ஜ் டவுன் கோர்ட் விசாரிக்க தடை
சென்னை: சட்டசபைக் காவலர் விஜயனை தேமுதிக எம்.எல்.ஏக்கள் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடந்தபோது, அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தே.மு.தி.க. உறுப்பினர்களை அவையை விட்டு வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவை காவலர்கள், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற முயற்சித்தபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், அவை காவலர் விஜயனை, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விஜயன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேமுதிக எம்.எல்.ஏக்கள்
இந்த வழக்கில் தே.மு.தி.க.வை சேர்ந்த கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. சேகர், சூலூர் எம்.எல்.ஏ. தினகரன் ஆகியோர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு, சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
எம்.எல்.ஏ தினகரன்
இந்த வழக்கில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்றும் எனவே இந்த வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ. தினகரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றம் தடை
இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் தினகரன் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன், ‘இந்த வழக்கிற்கு கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான விசாரணையை வருகிற செப்டம்பர் 24ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதுவரை மனுதாரர் மீதான வழக்கை விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு இடைக்கால தடை விதிக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.