ஆதாரங்கள் இருப்பதால் அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து வருமான வரி சோதனைகளில் ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்ய வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து வருமான வரி சோதனைகளில் ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கரைஇ கைது செய்ய வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடப்பது தொடர்பாக கோடிக்கணக்கிலான பணம் கைப்பற்றப்பட்டது. இநநிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவிக்கையில், விஜயபாஸ்கரின் இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் அவர் ரூ.5.16 கோடி லஞ்சமாக பெற்றிருக்கிறார். சுகாதாரத்துறை நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் மூலம் ரூ. 2.38 கோடி கணக்கில் வராத பணம் கிடைத்துள்ளது.
எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர்கள் நியமனத்தில் ரூ.32 லட்சம் லஞ்சமாக வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மருந்துகள் மற்றும் தளவாடங்களை வாங்கிய வகையில் மட்டும் ரூ.1.28 கோடி கையூட்டு பெறப்பட்டுள்ளது.
பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் தொடர்பான பணிகளில் ரூ.41.50 லட்சம் ஊழல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் ஆதாரங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். எனவே அவரை இன்னும் அமைச்சர் பதவியில் வைத்திருக்காமல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அன்புமணி.