சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு வெயில் உக்கிரமாக இருக்கும்- வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் உக்கிரமாக இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்யத் தொடங்கிய உடன் வெயிலின் தாக்கமும் படிப்படியாக குறைந்துவிடும்.
சென்னையில் மே மாதம் இறுதி வரை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த வாரம் 3 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது.
கடந்த மூன்று தினங்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து உள்ளது. சென்னையில் வெயில் சதமடித்து வருகிறது. சென்னைவாசிகள் புழுக்கத்தில் தவித்து வரும் நிலையில், வெயில் மேலும் 2 தினங்களுக்கு உக்கிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்குக் காரணம், மேற்கில் இருந்து பலத்த தரைக்காற்று வீசுவதால் கடல்காற்று வீச தொடங்குவது தாமதமாவதாக கூறியுள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனத்தால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை மழைக்கு வாய்ப்பில்லை என கூறியுள்ள வானிலை மையம், எனினும் இடிமேகங்கள் உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சாலை ஓரம் நடைபாதைகளில் உள்ள கரும்பு ஜூஸ், சாத்துக்குடி, கிர்ணிப்பழம் ஜூஸ் கடைகளில் மக்கள் கூட்டம் மீண்டும் அலை மோதி வருகிறது. பழக்கடைகளிலும் விற்பனை அதிகரித்துள்ளது.