உள்ளாட்சித்தேர்தல் தடைக்கு யார் காரணம்... சட்டசபையில் கார சார விவாதம்
உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் 100 சதவிகித வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் இன்று 2வது நாளாக உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் நீதிமன்றத்துக்கு சென்று தடை வாங்கியது திமுகதான் என்று சட்டசபையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம் சாட்டினார்.
உள்ளாட்சி தேர்தலை எப்போது வேண்டுமானலும் நடத்த அரசு தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் 100 சதவிகித வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
சட்டசபையில் இன்று 2வது நாளாக உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. தி.மு.க. உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார். உள்ளாட்சி தேர்தல் கடந்த 9 மாதமாகியும் நடத்தப்படவில்லை. நீதிமன்றத்தில் நீங்கள் வாய்தா வாங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்.
அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறுக்கிட்டு பதில் அளித்தார். அம்மாவின் அரசு, உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் குறுகிய காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதாவது, பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திமுக வழக்கு
உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கத்தில், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களை தெரிவித்து, ஜூலை 2016ஆம் ஆண்டு தி.மு.க தான் வழக்கு தொடர்ந்தது. அதை 21.9.2016 தேதியில் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்தி முடிக்க அனுமதி அளித்தது. இதை எதிர்த்து தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அம்மேல்முறையீட்டு வழக்கு 12.7.2017 அன்று விசாரணைக்கு வர உள்ளது.
இட ஒதுக்கீடு
24.10.2016 அன்றுடன் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைய இருந்து நிலையில் அதற்கு முன்பாக, தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில், மாநில தேர்தல் ஆணையம் 26.9.2016ல் தேர்தல் அறிவிக்கையினை வெளியிட்டது. ஆனால், தேர்தலை தாமதப்படுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் தி.மு.க. மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இம்முறை, பழங்குடியினருக்கு போதிய அளவில் இடஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற காரணம் கூறப்பட்டது.
மேல் முறையீடு
முந்தைய தேர்தல்களைக் காட்டிலும், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பழங்குடியினருக்கு அதிகமான பதவியிடங்கள் ஒதுக்கீடு மற்றும் முதல் முறையாக மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடம் (நீலகிரி மாவட்டம்) பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்கிற அரசுத் தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை உறுதி செய்தது. ஆனால், தேர்தல் அறிவிக்கை முறையாக செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டு 4.10.2016 அன்று தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்தது.
தீர்ப்பு வரட்டும்
இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 12.7.2017 அன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கும், 12.7.2017 அன்று விசாரணைக்கு வர உள்ளது. இதைத் தவிர உள்ளாட்சித் தேர்தல் குறித்த பொதுநல வழக்குகளும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அத்தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
தேர்தலை நடத்த வேண்டும்
எங்களை குறை கூறாமல் தேர்தலை நடத்த வேண்டும். பெண்களுக்கு 33 சதவீகித இடஒதுக்கீட்டை தி.மு.க. ஆட்சி தான் தேர்தலில் நடைமுறைப்படுத்தியது. அதேபோன்று பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டையும் தி.மு.க. ஆட்சி தான் நடைமுறைப்படுத்தும் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
100 சதவிகிதம் வெற்றி
அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் குறுக்கிட்டார்.பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு அம்மா தான் அடித்தளம் அமைத்தார். அதேபோன்று பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வந்தவரும் அம்மா தான். தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் தான் நீதிமன்றத்துக்கு சென்று தடை வாங்கி இருக்கிறீர்கள். தேர்தல் நடந்தால் நாங்கள் 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
ஸ்டாலின் பேச்சு
முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். ஆனால் மாநில தேர்தல் ஆணையம் தான் கோர்ட்டில் தேர்தலை நடத்த இப்போது தயாராக இல்லை என்று அவிடவிட் தாக்கல் செய்தது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நாங்கதான் வெற்றி பெறுவோம்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எழுந்து, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது அம்மா. 50 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வந்ததும் அம்மா தான். நாங்கள் தான் 100 சதவிகித வெற்றி பெறவோம் என்று கூறினார். சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தாலும் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் காரசார விவாதம் நடைபெற்றது.