சென்னை: மழை நீரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
சென்னை: சென்னையில் மழைநீரில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று காலையில் திடீரென மழை கொட்டித்தீர்த்தது. பாரிமுனை ராஜாஜி சாலை பகுதியில் பெய்த பலத்த மழையால் தண்ணீர் தேங்கி கிடந்தது. கடற்கரை ரயில் நிலையம் அருகிலும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடற்கரை ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

மழை பெய்து கொண்டிருந்தபோது 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவர் வழியாக அவர் புகுந்தபோது அதில் பதித்திருந்த கேபிள் வயரில் இருந்து மின்சாரம் அந்த பெண்ணை தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
அவரது உடல் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. பலியான பெண் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications