சென்னை குண்டு வெடிப்பு எதிரொலி … தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்கள், கோவில்கள், மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூர்- கவுகாத்தி ரயிலில் இன்று குண்டுகள் வெடித்தன. இதில் ஒருவர் உயிரிழந்தார் பலர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வடபழனி முருகன் கோவில், மசூதி, சர்ச்சுகளிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையம்
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள 5 பாதைகளில் 2 பாதைகள் அடைக்கப்பட்டுவிட்டன. 3 பாதைகள் வழியாக மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதனை செய்த பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றன.
மின்சார ரயில்களில் சோதனை
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுகின்றன.
கோவில்களில் பாதுகாப்பு
வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஆயிரம் விளக்கு மசூதி, திருவல்லிக்கேணி மசூதி, சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்பேடு பேருந்து நிலையம்
மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு பேருந்து நிலையம், காய்கறிச் சந்தையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. குண்டு வெடிப்புத் தகவல் கிடைத்த உடன் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். கோவிலைச்சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் – கோவை
சென்னை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கோயம்பத்தூர் ரயில் நிலையத்திலும், திருப்பூர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
வணிகவளாகங்களில் சோதனை
மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களிலும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை குண்டுவெடிப்புச் சம்பவம் தமிழகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணுமின் நிலையங்களுக்கு பாதுகாப்பு
கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின்நிலையம், வட சென்னை அனல் மின் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிகப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு
லோக்சபா தேர்தல் ஓட்டு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.