பஸ்களுக்கு விதிமுறை வேண்டாம்...தனியார் பள்ளிகளின் மனு மீதான விசாரணை ஹைகோர்ட்டில் ஒத்திவைப்பு
சென்னை: பள்ளிப் பேருந்துகளுக்கென்று வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை ரத்த செய்யக் கோரி தனியார் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டையின் வழியாக விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து பள்ளிப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்கள் அளித்திருந்தது. அதன்படி, தமிழக அரசும் பள்ளிப் பேருந்துகள் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை வகுத்தது.

பள்ளி பேருந்துகளில் படிகட்டுகள் அரை அடி உயரத்தில் இருக்க வேண்டும். பின் புறம் வெளியேறும் வகையில் அவசர வழி அமைக்கப்பட வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் மிக முக்கியமானவை.
இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு ஏற்றதல்ல என்றும் இதனை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறி தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தன. அதன் அடிப்படையில் போக்குவரத்து துறை அதிகாரி தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்து தனியார் பள்ளிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி ஆஜராகி, பள்ளிகள் தரப்பில் குழுவிடம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் போக்குவரத்து துறை ஆணையர் கடந்த ஜுலை 29ம் தேதி தமிழக அரசின் போக்குவரத்து துறை செயலாளருக்கு அனுப்பிவிட்டதாகவும், அந்த பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறுவதால் அரசு தரப்பின் முடிவை தெரிவிப்பதற்கு இன்னும் 4 வார காலம் அவகாசம் தேவை என்றும் குமாரசாமி கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications