”வசந்தத்தை வரவேற்கும் வண்ணமயமான ஹோலி”
சென்னை: ஹோலி பண்டிகை நாளை உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஹோலி அல்லது "ரங்க பஞ்சமி" என்பது இந்துக்களின் வசந்தகால பண்டிகையாகும்.
துல்ஹேதி, துலாந்தி, துலேந்தி என்ற பெயர்களால் ஹோலி அழைக்கப்படுகிறது.
வட இந்தியர்கள் மட்டும் அல்லாமல் அனைவராலும் தற்போது ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கோடைகால வரவேற்பு:
இந்தியா, நேபாளம், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து மொரீஷியஸ் உள்பட இந்துக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் கோடைகாலத்தை வரவேற்கும் வகையில், பங்குனி மாதம் பவுர்ணமி நாளில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண லீலாதான் ஹோலி:
கிருஷ்ணபகவான் குழந்தை பருவத்தில் கோபியர்களுடன் விளையாடியதை குறிப்பதுதான் ஹோலி பண்டிகை. கிருஷ்ணரின் லீலைகள், குறும்புகள், பாடல்களாக பாடப்பட்டு வண்ண நீரை குழாய்களில் நிரப்பி பீச்சியடித்தும், வண்ணப் பொடிகளை ஒருவர் மீது மற்றொருவர் தூவியும் சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவரும் விளையாடி மகிழ்வார்கள்.
மதுராவில் 16 நாள் திருவிழா:
கிருஷ்ண பகவான் வளர்ந்த இடமான பிருந்தாவன் மற்றும் மதுரா உள்ள உத்திர பிரதேசத்தில் இந்த பண்டிகை 16 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
பக்தப் பிரகலாதன்:
பிரம்மாவிடம் சாகா வரம் பெற்ற இரணியன் என்ற அரக்கன் தன்னை எல்லோரும் கடவுள் என நினைத்து வழிபட வேண்டும் என்று நினைத்தான். இரணியன் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவை மட்டும் கடவுளாக வணங்கி வந்தான்.
நெருப்பால் அழியாத ஹோலிகா:
ஆத்திரம் அடைந்த இரணியன் மகன் என்றும் பாராமல் பிரகலாதனை துன்புறுத்தி அழிக்க நினைத்தான். மகனை கொல்ல தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். ஹோலிகா நெருப்பினால் அழியாத தன்மை படைத்தவள்.
காப்பாற்றிய கடவுள் அருள்:
தனது மகன் பிரகலாதனை மடியில் அமர்த்திக்கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் உட்காரும்படி கூறினான் இரணியன். மகாவிஷ்ணுவை மனதில் நினைத்து ஹோலிகாவின் மடியில் அமர்ந்த பிரகலாதன் கடவுள் அருளால் நெருப்பில் இருந்து மீண்டான்.
இரவினில் கொண்டாட்டம்:
ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள் என்கிறது புராண கதை. இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையின் முதல்நாள் இரவு வெட்ட வெளியில் தீயை மூட்டி அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்கிறார்கள்.
மன்மதனின் நினைவு நாள்:
இது "ஹோலிகா தகனம்" அதாவது ஹோலிகாவை எரித்தல் அல்லது சோட்டி ஹோலி என்று அழைக்கப்படுகிறது. ஆந்திராவில் இதை காம தகனம் என்கிறார்கள். அதாவது காமனான மன்மதன் எரிந்து சாம்பலான நாளின் நினைவாக இதனை கொண்டாடுகிறார்கள்.
ஊஞ்சல் உற்சவம்:
மேற்கு வங்கத்தில் இதனை "தோலோன்சவ" என்று அழைக்கின்றனர். இதற்கு ஊஞ்சல்களின் உற்சவம் என்று பொருள். அங்கு பகவான் விஷ்ணுவின் சிற்பங்களுக்கு அலங்காலம் செய்து நிறங்கள் பூசி, அழகான ஊஞ்சல்களில் அமர்த்தி ஆட்டுவார்கள்.
நேபாளில் தேசிய விடுமுறை:
உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் 80 சதவீதம் பேர் இந்துக்கள். இங்கு ஹோலி பண்டிகை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் இதை "ஹோலா மொஹல்லா" என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.
ஹோலியின் ஸ்பெஷல் உணவு:
தயிர், வடை, மைதா, பால், சர்க்கரை, பழங்கள் இவைகள் சேர்த்து செய்யும் "மாம்புவ்" எனும் பாரம்பரிய உணவு வகை தான் இவைகளில் முக்கியம் வாய்ந்தது.
ஆண்கள் ஜாக்கிரதை:
உத்தரபிரதேசம் பர்சானாவில் ஹோலியின் போது பெண்கள், ஆண்களை தடியால் அடித்து விரட்டுவது தனித்தன்மை வாய்ந்த ஒன்றாகும். சுல்தான்பூரில் வேடிக்கை விழாவாக ஹோலி கொண்டாடப்படுகிறது.
அதிகாரிகளும் மகிழும் ஹோலி:
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மணிப்பூர்வாசிகள் ஹோலி பண்டிகையை 6 நாட்கள் கொண்டாடுகிறார்கள். குஜராத், ஒடிசா, காஷ்மீரில் மக்கள் மட்டுமின்றி பாதுகாப்பு படை அதிகாரிகளும் ஹோலியை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
வாழ்க்கையில் வசந்தம் பொங்கட்டும்:
குளிர்காலம் முடிந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இப்பண்டிகை நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. நம் வாழ்வு வண்ணமயமாகட்டும்,வசந்தம் வீசட்டும் என்ற நம்பிக்கையுடன் நாமும் வண்ணமயமாக ஹோலியை கொண்டாடுவோம்.வண்ணங்களின் கலவை போலவே நம் வாழ்க்கையும் சிறக்கட்டும்.