கும்பகோணம் பள்ளி தீ விபத்து 10 வது நினைவு தினம்: பெற்றோர்கள் கண்ணீர் அஞ்சலி
கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்து ஏற்பட்டு இன்று 10ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
2004-ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்து 94 குழந்தைகளின் உயிரைப் பறித்தது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்து தொடர்பாக அந்த பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமி, அவரது மனைவி உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்டு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தீ விபத்து வழக்கை ஆறு மாத கால அவகாசத்திற்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. இருப்பினும் இந்த வழக்கு இன்னமும் முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது பாதிக்கப்பட்டோரை மிகவும் கவலையடைச் செய்துள்ளது.
10 ஆண்டுகள் கடந்த சோகம்
பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இன்று காலை குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் படையலிட்டு அஞ்சலி செலுத்தினார்கள். குழந்தைகள் புதைக்கப்பட்ட கல்லறை தோட்டத்துக்கு சென்று குழந்தைகளுக்கு பிடித்த திண்பண்டங்கள், விளையாட்டு பொருட்கள் வைத்து விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
கண்ணீர் அஞ்சலி
தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் கும்பகோணம் அமிர்தா நகரில் அமிர்தவிநாயகர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தீ விபத்து நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன்பு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், காயமடைந்த மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெற்றோர்கள் கதறி அழுதனர். இதனை பார்த்த பொது மக்களும் கண்ணீர் விட்டனர்.
மவுன அஞ்சலி
தமிழக அரசு சார்பில் கும்பகோணம் பாலக்கரையில் பள்ளி தீ விபத்தின் நினைவாக ரூ.66 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
நிவாரணம் கிடைக்கவில்லை
தொடர்ந்து தீ விபத்து நடந்த பள்ளி முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தொடர் அஞ்சலி நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். பாதிக்கட்டப்பட்ட பெற்றோர் பலர், இதுவரை தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையென்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மறையாத சோகம்
அதுமட்டுமல்லாமல், தீ விபத்தினால் ஏற்பட்ட சோகம் 10 ஆண்டுகளாகியும் நீங்காமல் இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர், குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்.
வழக்கு முடிவுக்கு வருமா?
விபத்து தொடர்பான வழக்கு விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்.
94 அகல் தீபங்கள்
இன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் இருந்து குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் 94 அகல் தீபங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இதில் பொதுமக்களும் பங்கேற்கிறார்கள்.