லோக்சபா தேர்தல்- அதிமுக வெற்றிக்கு தமிழருவி மணியன் சொல்லும் 4 காரணங்கள்!
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றி பெற வாக்காளர்களை விலைக்கு வாங்கியது உட்பட 4 முக்கிய காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார் காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன்.
நக்கீரன் வாரம் இருமுறை ஏட்டுக்கு தமிழருவி மணியன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றிக்கு 4 காரணங்கள். ஒன்று, வாக்காளர்களை விலைக்கு வாங்கியது. குறிப்பாக, மாற்றுக்கட்சிக்கு உதவும் தலித் மற்றும் சிறு பான்மையினரின் வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகளை விலை கொடுத்து வாங்கியது. பணம் மட்டுமே வெற்றியை தீர்மானித்து விடாது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அது ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.
இரண்டாவது, இரட்டை இலை என்கிற எம்.ஜி.ஆர். கொடுத்த சொத்து.
மூன்றாவது, ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் தங்களது இலவச திட்டங்களை கட்சி பாரபட்சமில்லாமல் கொண்டு சேர்த்தது.
நான்காவது, ஜெயலலிதா பிரதமரானால் நல்லது தானே என்கிற மக்களின் அறியாமை.
அ.தி.மு.க. வின் வெற்றிக்கு இவைகள் அடிப் படைக் காரணங்கள். இதைத் தாண்டி, ஜெயலலிதா ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் எந்த ஒரு கட்சிக்கும் முழுமையாக கிடைக் காமல் பல முனைகளில் பிரிந்து போனதும் முக்கிய காரணம்.
திமுக தோல்வி ஏன்?
தி.மு.க.வின் படு தோல்விக்கு மேற்சொன்னவை அடிப்படைக் காரணங்களாக இருப்பினும், மிக முக்கிய காரணமாக காங்கிரசையும் தி.மு.க.வையும் மக்கள் பிரித்துப் பார்க்கவில்லை என்பதுதான். காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் ஏறக்குறைய ஒன்பதாண்டுகள் இருந்த தி.மு.க., திடீரென்று காங்கிரசை உதறிவிட்டால் தி.மு.க. புனிதமாகி விடாது.
காங்கிரசை வீழ்த்த நினைத்த மக்கள் தி.மு.க.வையும் சேர்த்தே வீழ்த்தியிருக்கிறார்கள். தவிர, தி.மு.க.வில் அதிகரித்துள்ள குடும்ப அரசியலும் உள்கட்சி உள்குத்துகளும் காரணமாக இருக்கின்றன.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறியுள்ளார்.