சென்னையில் நடப்பதே தெரியாது... கடற்பரப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து எப்படி தெரியும் சாரே...
சென்னையில் நடக்கும் நிகழ்வுகள் குறித்தே தனக்கு தெரியாது என்று கூறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் நடந்தது மட்டும் எப்படி தெரியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை இந்திய கடலோர காவல்படையினர் நடத்தவில்லை என்று கூறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சென்னையில் என்ன நடந்தது என்றே தெரியாத நிலையில் நடுகடலில் நடந்தது அவருக்கு எப்படி தெரிந்தது என்ற கேள்வி நிலவுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அமைச்சர்களின் பேச்சும் செயல்பாடுகளுக்கு மிகவும் நகைச்சுவைக்குள்ளாக்கி சமூக வலைதளங்களில் கேலிப்பொருளாகி விட்டனர். முதலில் அமைச்சர் செல்லூர் ராஜூ, வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுப்பதற்காக தெர்மாகோலை ஆற்றில் மிதக்கவிட்டு மொக்கை வாங்கிக் கொண்டார்.
அதிலிருந்து அவரை நெட்டிசன்கள் ஓட்டோ ஓட்டு என்று ஓட்டி வருகின்றனர். அதற்கடுத்தாற்போல் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசுகையில் பாரத பிரதமர் மன்மோகன் சிங் என்று கூறிவிட்டார். பிரதமர் யாரென்று கூட தெரியாத ஒரு அமைச்சரா என்று வாங்கிக் கட்டி கொண்டார்.

உதயகுமாரும் சேர்ந்து கொண்டார்
இதேபோல் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவின் தந்தை மரணம் குறித்து விசாரிக்க சென்ற அமைச்சர் ஆர்பி உதயக்குமார் எச் ராஜாவின் தந்தை மரணத்திற்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்ததாக உளறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுபோல் தொடர்ந்து இவர்கள் உளறி வருவதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

எனக்கே தெரியாதுப்பா
கடந்த வாரம் சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து அமைச்சர்களிடம் கேட்டபோது உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும் என்றெல்லாம் ஒவ்வொரு கருத்தை கூறினர். ஆனால் திண்டுக்கல்லாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படியாப்பா!, எனக்கு தெரியாதே!!.. நான் இப்போதுதான் தூங்கி எழுந்தேன் என்று பதில் அளித்தார்.

தெரியாது என்று ஒரே பதில்
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனையின்போதும் அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அமைச்சர்கள் சிலர் வருமான வரி துறைக்கு ஆதரவாகவும், சசிகலா அங்கு இருந்ததால்தான் அங்கு சோதனை என்பது போன்றும் கருத்து கூறினர். ஆனால் திண்டுக்கல் சீனிவாசனோ வழக்கம்போல் போயஸ் கார்டனில் சோதனையா? எனக்கு தெரியாதுப்பா! என்று கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமன் கருத்துக்கு ஆதரவு
ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை இந்திய கடலோர காவல் படையே ஒப்புக் கொண்ட நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அந்த தோட்டா இந்திய கடலோர காவல் படையினருடையது அல்ல என்று கூறியிருந்தார். இதுகுறித்து திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசனிடம் கேட்டபோது அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மையே. இந்திய கடலோர காவல் படையினர் சுடவில்லை என்றார்.

வறுப்படும் சீனிவாசன்
சென்னையில் நடந்த வருமான வரிச் சோதனை குறித்தே தெரியாது என்று தூங்கி வழிந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ராமேஸ்வரத்தில் பல நாட்டிகல் மைல் கடல் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை மட்டும் அறிந்து கொண்டது எப்படி?.
வெள்ளை காக்கா பறக்குது என்று மத்திய அரசு கூறினால், இவரும் ஆம் பறக்குது என்பாரா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். விசாரணை நடைபெறுகிறது.... விசாரணைக்கு பிறகு பதில் கூறுகிறேன் என்பது போன்ற பதில்களை கூறாமல் இப்படி உளறுவதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications