ஆலங்காயத்தில் வென்றது திமுக தான்.. சத்தம் இல்லாமல் சாதித்த அதிமுக.. கொதிக்கும் திமுகவினர்
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு அதிமுக ஆதரவுடன் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது முதல்வர் ஸ்டாலினுக்கு இழுக்கு என தோல்வி அடைந்த திமுகவினர் குமுறுகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 18 பேர் அண்மையில் பதவியேற்றனர். , ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் 11 இடங்களில் திமுகவும், 4 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் பாமகவும், ஒரு சுயேட்சை வேட் பாளரும் வெற்றிபெற்றனர்.
18 கவுன்சிலர்களில் 11 இடங்களில் வெற்றிபெற்று தனி மெஜாரிட்டியுடன் உள்ள திமுக கவுன்சிலர்களில் ஒருவர் ஒன்றியக்குழுத்தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 7-வது வார்டில் வெற்றிபெற்ற ஜோலார் பேட்டை எம்எல்ஏ தேவராஜியின் மருமகள் காயத்ரி பிரபாகரனுக்கும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளரான திமுக பிரமுகர் பாரி என்பவரின் மனைவியான 6-வது வார்டு கவுன்சிலர் சங்கீதாபாரிக்கும் இடையே ஒன்றியக் குழுத்தலைவர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டது.
வீடு தேடி வந்து முதியோருக்கு தடுப்பூசி போடப்படும்.. புதுச்சேரியில் 25-ம் தேதி தடுப்பூசி திருவிழா
எவ்வளவு ஆதரவு
இது தொடர்பாக, இரு தரப் பினரும் தனித்தனியாக பிரிந்து வெற்றிபெற்ற கவுன்சிலர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள குதிரை பேரத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, காயத்ரி பிரபாகரனுக்கு ஆதரவாக 5 கவுன்சிலர்களும், சங்கீதாபாரிக்கு ஆதரவாக 6 கவன்சிலர்களும் இருந்தனர்.
சங்கீதாபாரி
அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியும், தன்னை சட்டப்பேரவை தேர்தலில் தோற்கடித்த திமுக எம்எல்ஏ தேவராஜின் மருமகள் காயத்ரி பிரபாகரன் ஒன்றியக்குழுத் தலைவராக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன், ஆலங்காயம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 4 அதிமுக கவுன்சிலர்களையும், சங்கீதாபாரிக்கு ஆதரவு தெரிவிக்க சொன்னதாக கூறப்படுகிறது.
கடத்தல் நாடகங்கள்
இதனால், காயத்ரி பிரபாகரன் பக்கம் உள்ள 5 கவுன்சிலர்களும் தனக்கு ஆதரவு அளிக்காவிட்டாலும், அதிமுக, பாமக மற்றும் ஒரு சுயேட்சை கவுன்சிலர்கள் மூலம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை எளிதாக கைப்பற்றி விடலாம் என சங்கீதாபாரி காத்திருந்தார். ஆனால், ஒவ்வொரு கவுன்சிலருக்கும் லட்சங்களில் பேரம் நடந்ததாக கூறப்படுகிறது. எதிர்தரப்பு கவுன்சிலர்களை கடத்திச்செல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதல்
அதன்படி, பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த திமுக, அதிமுக கவுன்சிலர்களை தங்களுடன் வருமாறு கையை பிடித்து தேவராஜ் தரப்பினர் இழுத்தனர். இதைக்கண்ட சங்கீதாபாரி தரப்பினரும் பதிலுக்கு ஒன்றிய கவுன்சிலர்களை தங்கள் பக்கமாக இழுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பானது. பொதுமக்கள், காவல் துறையினர் முன்னிலையில், திமுக கவுன்சிலர்கள் சட்டையை பிடித்து இழுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். அப்போது தனித்தனி வாகனங்களில் கடத்தப்பட்ட திமுக கவுன்சிலர்கள் திருவண்ணாமலை, வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக ஆதரவு
இந்நிலையில் இன்று நடந்த மறைமுக தேர்தலில் ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் சங்கீதா பாரி ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார். இவருக்கு திமுக உறுப்பினர்கள் சிலர் மற்றும் அதிமுக, பாமகவினர் ஆதரவு கொடுத்ததால் எளிதாக வெற்றி பெற்றார். இதனால் தோல்வியுற்ற காயத்ரியின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர். அதில் ஒருவர் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்து சமரசம் செய்தார்.
கொதிக்கும் ஆதரவாளர்கள்
திமுகவுக்கு துரோகம் செய்ததாகவும் அதிமுகவுக்கு கைக்கூலியாக மாறியதாகவும் கூறி திமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனி வேல் மற்றும் ஞானவேல் ஆகியோரை எதிர்த்து திமுக ஒன்றிய குழு உறுப்பினர் காயத்ரி ஆதவாளர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். செய்தியாளர்களிடம் காயத்ரி ஆதவாளர்கள் கூறும் போது, ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் 11 இடங்களில் திமுகவும், 4 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் பாமகவும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் வெற்றிபெற்றனர். திமுகவினர் 11 பேரில் ஒருவர்தான் வெற்றி பெற வேண்டும். இதில் 4 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு அதிமுக மற்றும் பிற கட்சியினர் ஆதரவுடன் சங்கீதா பாரி வெற்றி பெற்றுள்ளார். அதிமுக ஆதரவுடன் பதவி ஏற்பது முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட இழுக்கு என்று கொதித்தனர். அதிமுகவினர் வைத்து திமுக வேட்பாளர் வென்றதாக பார்க்கப்பட்டாலும், அதிமுக யாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என நினைத்ததோ அதை சாதித்துவிட்டதாக திமுகவினர் குமுறுகிறார்கள்.