ஓகி புயல் நகர்ந்த பிறகு எப்படி இருக்கிறது கன்னியாகுமரி மாவட்டம்?
ஓகி புயல் நகர்ந்த பிறகும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்: தமிழகம் மற்றும் கேரளத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திய ஓகி புயல் தற்போது லட்சத்தீவுகளுக்கு அருகே சென்றுவிட்டபோதிலும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முட்டி அளவு நீரில் தத்தளித்தபடி உள்ளனர்.
வங்கக் கடலில் உருவான ஓகி புயல் கடந்த 2 தினங்களுக்கு தென் தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இதனால் கடந்த இரு நாள்களுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்தது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால் அவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். தென் தமிழகத்தையே குப்புற புரட்டி விட்டது இந்த ஓகி.

மின்சாரம் இல்லை
கன்னியாகுமரி மாவட்டம்தான் கடும் சேதத்தை சந்தித்தது. மேலும் தமிழக எல்லையில் உள்ள கேரள பகுதிகளும் ஓகியால் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் சுமார் 4000 மின் வயர்கள் அறுந்து விழுந்து விட்டன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மக்கள் அவதி
ஓகி புயல் லட்சத்தீவு பகுதியை நோக்கி நகர்ந்து சென்றுவிட்ட போதிலும் கன்னியாகுமரி மக்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்து வருகின்றனர். மின்சார வயர்களை சரி செய்ய இன்னும் ஒரு வார காலம் பிடிக்கும் என தெரிகிறது. இதுவரை தமிழகம் மற்றும் கேரளாவில் புயலுக்கு 13 பேர் பலியாகிவிட்டனர்.

மீனவர்கள் மாயம்
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 14 பேரை காணவில்லை. அவர்களை மீட்க கடற்படையினர் சென்றுள்ளனர். கேரளாவில் 155 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 150 மீனவர்கள் அவர்களாகவே கரை திரும்பினர். எனினும் திருவனந்தபுரம்- கொல்லம் கடலோர பகுதிகளில் கடற்படை, விமான படை, கடலோர காவல் படை என ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி நிலை என்ன
நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தூத்துக்குடியில் வாழை சாகுபடி கடும் சேதத்தை சந்தித்துள்ளது. திருவாரூரில் பல்வேறு பயிர்கள் நாசமடைந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் இன்று காலை முதல் மழை பெய்ததாக தகவல்கள் ஏதும் இல்லை. கன்னியாகுமரியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள அபாய எச்சரித்தை
காவிரியின் துணை நதிகளான அமராவதி மற்றும் பவானி ஆறுகளில் அதிக அளவுக்கு நீர் வரத்து இருப்பதால் நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள அமராவதி, மோயாறு, பில்லூர் மற்றும் பவானிசாகர் அணைகள் நிரம்பு அபாயம் உள்ளது.

போதுமான நீர்
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள ஏரிகளில் இன்று முதல் 6-ஆம் தேதிக்குள் அதிகமான நீர் வரத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சாத்தனூர் அணையிலிருந்து வெளியேறும் நீர் கண்காணிக்கப்படுகிறது. வடதமிழகம் மற்றும் தென் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications