அதிமுக செயற்குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு..! அமைச்சர்கள் பெருமூச்சு
சென்னை: வரும் 21ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட அதிமுக செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அதிமுக வரலாறு காணாத வெற்றியை பெற்றது. அதன்வாக்கு சதவீதம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதே நேரம் 40க்கு 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசை பலிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 21ம்தேதி கட்சி தலைமை கழகத்தில் மாலை 4.20 மணிக்கு துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை ஜெயலலிதா எடுக்க இருந்ததாக கூறப்பட்டது.
நால்வர் அணி
அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்தப்படியாக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய நால்வர் குழுவே பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தது. இந்த 4 பேர் கொண்ட குழுவே கட்சி சம்பந்தமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை அனுப்புவது, கட்சி நடவடிக்கைகள், கட்சியில் ஒவ்வொரு நிர்வாகிகளின் செயல்பாடு, தேர்தலின் போது கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவது, முதல்வர் ஜெயலலிதா எங்கு சென்றாலும் அவரின் சுற்றுப்பயணம் திட்டங்களை ஒழுங்காக நிறைவேற்றுவது, அரசு திட்டங்கள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தும்போது இந்த 4 பேர் கொண்ட அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். இதனால், கட்சியில் இந்த 4 பேர் செல்வாக்கு உள்ளவர்களாக இருந்து வந்தனர்.
முனுசாமி நீக்கம்
கட்சியில் என்ன நடந்தாலும் இவர்களிடமே கருத்துகள் கேட்கப்பட்டு வந்தன. உள்ளாட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை இவர்கள் பரிசீலித்து கொடுக்கும் வேட்பாளர்களே தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவர்களாக கட்சியில் வலம் வந்தனர்.ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு 4 பேர் குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர் கே.பி.முனுசாமி நீக்கப்பட்டார். தருமபுரி தொகுதியை பாமகவிடம் பறி கொடுத்ததுதான், முனுசாமிமீதான இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்பட்டது.
எடப்பாடி 'என்ட்ரி'
முனுசாமி வகித்த ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பொறுப்பிற்கு மற்றொரு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவரப்பட்டுள்ளார். இந்நிலையில், கட்சியின் நிர்வாகத்தை கவனிப்பதர்காக மேலும் சிலரை முன்வரிசைக்கு கொண்டுவர வேண்டும் என்று ஜெயலலிதா விரும்புகிறாராம்.
அனுபவஸ்தர்களுக்கு வாய்ப்பு
ஏற்கனவே கட்சி பணியில் நல்ல அனுபவம் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார், தங்க தமிழ்ச்செல்வன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய நால்வருக்கும் அமைச்சர் பதவியுடன் சேர்த்து, கட்சியின் முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட கூடிய அறிவிப்புகளை இக்கூட்டத்தில் ஜெயலலிதா அறிவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆற்றல்மிக்க அமைச்சரவை..
இதன் மூலமாக, கட்சியை நிர்வாகரீதியாக மேலும் பலம் பொருந்தியதாக மாற்ற ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகவும், பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க கூடிய ஆற்றல் கொண்டவர்களை அமைச்சரவையில் வைத்துக்கொள்ளவும் அவர் முடிவு செய்துள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் தற்போதுள்ள அமைச்சர்கள் சிலருக்கு கல்தா கிடைக்கலாம் என்று கூறப்படுவதால் செயற்குழு கூட்டத்தை பரபரப்போடு எதிர்பார்த்திருந்தனர் அமைச்சர்கள். இந்நிலையில் ஜெயலலிதா இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், அதிமுக செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.