நாங்கள் படி படி என்கிறோம்… அதிமுக அரசு குடி குடி குடி என்கிறது: கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: "நாங்கள் படி படி படி என்று கூறி கல்விக்கடன்களை அளிக்கிறோம்... ஆனால் அதிமுக அரசோ குடி குடி குடி என்று கூறி டாஸ்மாக் கடைகளை திறக்கின்றது" என்று சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவங்கங்கை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் தனது தந்தை சிதம்பரத்துடன் இணைந்து வாக்கு சேகரித்து வருகிறார்.கிராமம், கிராமமாக செல்லும் இவர்கள், திறந்த ஜீப்பில் மட்டுமல்லாது நடந்தே சென்றும் வாக்கு சேகரிக்கின்றனர்.
பெண்கள் கூட்டத்தின் நடுவே பேசும் போது, பாஜகவில் சிறுபான்மையினருக்கும், தலித்களுக்கும் பாதுகாப்பில்லை. ஏழைகளுக்கு மதிப்பில்லை. அது பணக்காரர்களின் கட்சி என்றார்.
மதுக்கடைகள் திறப்பு
மேலும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏழை மாணவர்கள் படிக்க கல்விக்கடன்கள் வழங்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிலோ, ஏராளமான மதுக்கடைகள் திறக்கப்பட்டன. நாங்கள் படி படி படி என்கிறோம். ஆனால் அதிமுக அரசோ குடி குடி குடி என்கிறது என்றார்.
திட்டங்களை பாருங்கள்
கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கல்லல் ஒன்றிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார். அப்பொழுது பேசிய அவர், ''கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ள திட்டங்களை மக்கள் பார்க்க வேண்டும் என்றார்.
நூறுநாள் வேலை
இத்தொகுதியில் மட்டும் 19 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கபட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், ஏழை மக்களின் பசியை போக்க நூறுநாள் வேலை என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி.
தமிழக அரசு காரணம்
தற்பொழுது நாள் ஒன்றிற்கு 142 ரூபாய் கூலியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் இப்பகுதியில் கூலி குறைவாக கிடைக்க காரணம் தமிழக அரசுதான். அவர்கள் தான் கூலியை குறைத்து தருகிறார்கள். அதே நேரம் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் இந்த திட்டத்தையே இல்லாமல் செய்து விடுவார்கள்.
வயிற்றில் அடிக்கிறது
அ.தி.மு.க. ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் என்றால், பா.ஜ.க. ஏழை மக்களின் தலையில் அடிக்கும். இத்திட்டம் இல்லை என்றால் உங்கள் நிலையை நினைத்து பாருங்கள் என்றார் சிதம்பரம்.