ஒரு வருஷமாவே சுவாதியை தெரியும்.. நான் நிறைய பேச வேண்டியிருக்கு.. ராம்குமார் பரபரப்பு தகவல்
சென்னை: எனக்கு சுவாதியை ஒரு வருஷமாகவே நன்றாகத் தெரியும். பேஸ்புக்கில் தொடர்ந்து சாட் செய்வோம். வேலை தேடித்தான் சென்னைக்கு வந்தேன். இடையில் என்னவெல்லாமோ நடந்து விட்டது. சுவாதி கொலைக்கு நான் மட்டும் காரணமல்ல, சிலரின் தூண்டுதலால்தான் இது நடந்தது என்று ராம்குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவாதி கொலை தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே பல நூறு சந்தேகங்கள் சிறகடித்துப் பறந்தபடி உள்ளன. இது முக்கோணக் காதல் இன்று இடையில் தகவல்கள் வெளியாகின. ராம்குமார் மட்டும் இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று சில தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் ராம்குமார் குடும்பத்துக்கு நெருக்கமான வழக்கறிஞர் ராம்ராஜ் என்பவர் புழல் சிறைக்குப் போய் ராம்குமாரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:
சுதந்திரமாக பேச முடியவில்லை
ராம்குமாரிடம் தனியாகப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்காமல், சிறைத்துறை கண்காணிப்பாளர், மூன்று காவலர்கள் என சுற்றி நின்று கொண்டனர். இவ்வாறு அவர்கள் நடந்து கொள்வது ஆச்சர்யமளிக்கிறது. நிதானமான குரலில் சிலவற்றைப் பேசினார் அவர். ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தவர். சிறு வயதில் இருந்தே அந்தக் குடும்பத்தை எனக்குத் தெரியும். இப்போது மொத்தக் குடும்பமும் இந்த சம்பவத்தால் பரிதவித்து வருகிறது. அவர்களது அனுமதியின் பேரில்தான் புழல் சிறைக்குச் சென்று பார்த்தேன்.
உளவியல் ரீதியாக சித்திரவதை
கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே மிகுந்த மனப்பதட்டத்தில் இருக்கிறார் ராம்குமார். உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் காவல்துறை கடுமையான சித்ரவதைகளைச் செய்திருக்கிறது. அவரது கழுத்துப் பகுதி, அரை வட்டத்தில் அறுக்கப்பட்டிருக்கிறது. தற்கொலை முயற்சியில் ராம்குமார் இறங்கவில்லை. காவல்துறையினரே அனைத்தையும் செய்தார்கள்.
நிறைய பேசனும் சார்
சிறை அதிகாரிகள் அருகில் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத ராம்குமார், ' நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது சார். என்னை மட்டும் சிக்க வைத்துவிட்டார்கள். ஒரு வருடத்திற்கு முன்பே சுவாதியை எனக்குத் தெரியும். ஃபேஸ்புக் மூலமாகத்தான் இருவரும் பேசி வந்தோம். சேட்டிங்கில் நிறைய பேசுவார். பி.ஈ படிப்பில் நான்கு அரியர் இருந்ததால், எங்குமே வேலைக்குப் போக முடியவில்லை.
சிலரின் தூண்டுதலால்தான் கொலை
சென்னையில் ஏதேனும் வேலை கிடைத்துவிடும் என்று நம்பித்தான் சென்னை வந்தேன். சுவாதி வசிக்கும் பகுதியிலேயே மேன்சனில் அறை எடுத்து தங்கினேன். ஆனால், சென்னை வந்த நாளில் இருந்து எந்தக் கம்பெனிக்கும் வேலைக்குப் போகவில்லை. இடையில் எதிர்பாராமல் என்னவெல்லாமோ நடந்துவிட்டது. சுவாதி சாவுக்கு நான் மட்டும் காரணமல்ல. சிலரின் தூண்டுதலில்தான் நடந்தது என்ற ராம்குமார் மேலும் சில தகவல்களைச் சொன்னார்.
கேஸை முடிக்கத் துடிக்கும் போலீஸ்
ஆனால், அதை இப்போதைக்கு சொல்வதற்கில்லை. வழக்கு விசாரணையின்போது தேவைப்பட்டால் சொல்லுவேன். தற்போது ராம்குமார் அளவுக்கு அதிகமான மனப் பதட்டத்தில் இருக்கிறார். போலீஸார் எதையாவது செய்துவிடுவார்கள் என பயப்படுகிறார். தொடக்கத்தில் இருந்தே வழக்கை முடித்துவிடவே காவல்துறை அவசரம் காட்டுகிறது. உண்மையை நிலைநாட்டுவதற்கு காவல்துறை விரும்பவில்லை என்றே தெரிய வருகிறது. பட்டப் பகலில் நடந்த ஒரு பெண்ணின் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் வழக்கறிஞர் ராம்ராஜ்.
வக்கீல் விலகல்
இந்த நிலையில் ராம்குமாருக்காக ஜாமீன் மனு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி விலகியிருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராம்குமாருக்காக ஆஜராகப் போகும் வக்கீல் யார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.