நாடு காக்கும் நற்பணிக்கு மட்டும் நீ தேவை, இவருக்கு பதிலளிக்க நானே போதும்: கமல்
சென்னை: நாடு காக்கும் நற்பணிக்கு மட்டும் நீ தேவை, இவருக்கு பதிலளிக்க நானே போதும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அரசுக்கு எதிராக தொடர்ந்து டிவிட்டரில் நடிகர் கமல் கருத்து தெரிவித்து வருகிறார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு துறைகளில் நடக்கும் ஊழல்கள் தொடர்பான ஆதாரத்தை அந்தந்த துறை அமைச்சர்களின் இணையதள இ.மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அமைச்சர்களின் இணையதள முகவரிகள் மற்றும் இ.மெயில் தகவல் தொடர்புகள் அனைத்தும் திடீரென முடக்கப்பட்டது.
ஊழல் தடுப்புப் பிரிவுக்கு
இதையடுத்து ஊழல் புகார்களை லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அனுப்புங்கள் என்று கமல் புதிய வேண்டுகோள் விடுத்தார். அரசியல்வாதிகள் குறித்து கமல் கூறிவரும் கருத்துக்கு அதிமுக அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
பதிலடியில் குதித்த ரசிகர்கள்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கமல் புதிய டிவீட்
இந்நிலையில் இன்று கமல் புதிய டிவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில் தரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
ரசிகர்களைக் காக்க
தேவையில்லாமல் தனது ரசிகர்கள் போலீஸாரின் நடவடிக்கைக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே கமல் இந்த டிவீட்டைப் போட்டுள்ளதாக தெரிகிறது. ரசிகர்களும் கூட தெரியாமல் செய்து விட்டோம் என்று அவருக்கு பதிலளித்து வருகின்றனர்.