ஜெயா டிவியில் 2வது நாளாக ரெய்டு.. எச்ஆர், அக்கவுண்ட்ஸ் செக்ஷன் முடக்கம்.. ஒளிபரப்பு தொடர்கிறது
சென்னையில் ஜெயா டிவி அலுவலகம், ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் வீடுகளில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயாடிவி அலுவலகம், போயஸ்கார்டனில் உள்ள பழைய ஜெயாடிவி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரி சோதனை நீடிக்கிறது.
வரி ஏய்ப்பு புகார்கள் காரணமாக சசிகலா, தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடு மற்றும் நிறுவனங்களில் நேற்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனைக்கு 'ஆபரேசன் கிளீன் பிளாக் மணி' என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் மொத்தம் 190 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 1800 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நேற்று சோதனை நடந்த 190 இடங்களில் 40 இடங்களில் சோதனை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 150 இடங்களில் 2வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது.
நேற்று கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயாடிவி அலுவலகத்தில் வருமான வரி சோதனை நேற்றிரவு வரை நீடித்தது. சிறிது ஓய்வுக்குப் பின்னர் நள்ளிரவில் மீண்டும் சோதனை நடைபெற்றது.
ஜெயாடிவியில் ஷிப்ட் முறையில் பணி செய்து வரும் ஊழியர்கள் இரவு வீடுகளுக்கு சென்றனர். அதேபோல பிற்பகலில் ஷிப்ட்க்கு சென்றவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர். ரெய்டு சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு காபி, டீ, உணவு, இரவு உணவு கொடுத்து ஜெயா டிவி நிர்வாகம் உபசரித்தது.
ஜெயாடிவி அலுவலத்தில் இன்று காலையில் மீண்டும் சோதனை தொடர்கிறது. இதேபோல போயஸ்கார்டனில் உள்ள ஜெயாடிவி அலுவலகத்திலும் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தகவல் தெரியவரும்.