கருணாநிதி வைர விழாவில் பங்கேற்க நினைத்தேன்... நடக்கலையே... பாஜக கங்கை அமரன் புலம்பல்- Exclusive
கருணாநிதியின் வைர விழாவில் பாட ஆசைப்படுகிறேன். ஆனால் நானே வலிய போன் செய்தும் அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை என பாஜகவின் கங்கை அமரன் வேதனையுடன் கூறியுள்ளார்.
சென்னை: கருணாநிதியின் வைரவிழாவில் பாட ஆசைப்பட்டேன். வலிந்து கேட்டும் இன்னும் திமுக தரப்பில் இருந்து பதில் அளிக்கவில்லை என பாஜகவைச் சேர்ந்த கங்கை அமரன் வேதனையுடன் கூறியுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட கங்கை அமரன் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் ஆர்கேநகர், தினகரன், மு.க.ஸ்டாலின் என பரபரப்பாக பல விஷயங்களைக் கூறியுள்ளார்.
கங்கை அமரனின் பேட்டி:
கேள்வி: ஆர்கே நகர் இடைதேர்தலில் நீங்களே வாய்ப்புக் கேட்டீர்களா அல்லது அவர்களே உங்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார்களா?
பதில்: தமிழிசையுடன் என் முதல் சந்திப்பு அது. அவர் கேட்டார், நீங்கள் ஆர்கே நகரில் போட்டியிடுகிறீர்களா என்று. நான், எனக்கு தேர்தலில் நிற்பது எல்லாம் ஒத்து வராது' என்று கூறினேன். ஆனால், உடனே தினகரன் ஒருவேளை ஆர்கே நகரில் போட்டியிட்டால் நான் போட்டியிடுகிறேன் என்று சொன்னேன். அப்போது தினகரன் ஆர்கே நகரில் போட்டியிடுவது குறித்து எதுவும் உறுதியாகாத நேரம் அது.
தினகரன் போட்டி
என் பெயர் தலைமைக்கு சிபாரிசு செய்யப்ப்பட்டுள்ளது என தமிழிசை கூறினார். நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதியானது. ஆனால் அப்போது வரைக்கும் தினகரன் போட்டியிடுவது குறித்து உறுதியான செய்திகள் வரவில்லை.
மீண்டும் பாஜக வருமா?
கேள்வி: மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமா?
பதில்: கண்டிப்பாக ஆட்சிக்கு மீண்டும் வரும். இந்த மூன்றாண்டுகளில் ஆட்சியை பற்றி ஏதேனும் புகார்கள் உள்ளதா? ஊழல் புகார்கள் உள்ளதா? அண்மையில் நடந்த ஐந்து மாநிலங்கள் தேர்தலில் பாஜக தானே பெரும்பான்மையைப் பெற்றது.
பாஜகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் குற்றம் சொல்லுமளவுக்கு ஏதாவது நடந்துள்ளதா என யோசித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காது என்பது உங்களுக்கே தெரியும். ஆகையால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
பாழடைந்த ஆர்கே நகர்
கேள்வி: ஆர்கே நகர் தொகுதி பற்றி....
பதில்: ஆர்கே நகரில் மக்கள் எனக்கு மிகப் பெரிய ஆதரவு அளித்தார்கள். எல்லாரும் தெரு வழியாக பிரச்சாரம் செய்தால், நான் சந்துசந்தாகச் சென்றேன். குழந்தைகள் என்னைப் பார்ப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். எதாவது சாப்பிடுங்கள் என அன்பாக உபசரித்தார்கள். ஆனால், மிக மட்டமான தொகுதியாக உருவாக்கி வைத்திருந்தார்கள்.
தமிழகத்திலே மிகவும் பாழடைந்த தொகுதி என சொல்ல வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதா நின்று வெற்றி பெற்ற தொகுதியில் எந்த வசதிகளும் இல்லை. அவர் மறைந்துவிட்டாலும் அந்த தொகுதியில் ஏதேனும் செய்வார்களா என பார்த்தால், அதிமுகவினர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். என்னுடன் வந்தவர்களிடம் உங்கள் தொகுதியெல்லாம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'போட்டது போட்டபடியே இருக்கிறது. ஒரு முன்னேற்றமும் இல்லை' எனக் கூறினார்கள்.
ஸ்டாலின்
கேள்வி: மு. க. ஸ்டாலின் பிரதமர் மோடி தன்னை சந்திக்க மறுக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ஆளும் கட்சி தலைவர்களை சந்திப்பார்கள். எதிர்க்கட்சி தலைவரை சந்திக்க வேண்டும் என ஏதாவது ரூல்ஸ் இருக்கிறதா? திமுக தொண்டர் யாராவது என்னை தலைவரை சந்திக்க விடவில்லை என்று கூறிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது.
ஒரு எதிர்க்கட்சி தலைவரை எதற்கு பார்க்க வேண்டும். அவர்கள் பிரச்சனைகளைத்தான் கொண்டு வருவார்கள் என தெரியும். பிரச்சனைகளை சந்திக்க யாரும் தயாராக இருப்பார்களா என்ன? பிரதமருக்கு இதை விட நிறைய முக்கியமான வேலைகள் இருக்கலாம். பிரதமரின் அட்வைஸர்கள் என்னவெல்லாம் சொல்வார்கள்? ஒரு எதிர்க்கட்சி தலைவரை சந்திப்பது பிரச்சனையைத் தருமே தவிர சுமூகமான முடிவுகளைத் தராது.
கருணாநிதி வைரவிழா
கேள்வி: கருணாநிதியின் வைர விழாவில் கலந்துகொள்வீர்களா?
பதில்: நல்ல கேள்வி. நான் கருணாநிதியின் வைரவிழாவில் பாட வேண்டும், வாழ்த்துப் பெற வேண்டும் என இரண்டு மூன்று முறை நானே போன் செய்து கேட்டேன். ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவருடைய படங்களுக்கு நான் பாடல்கள் எழுதியுள்ளேன்.
அவர்கள் என்னை பாஜகவைச் சேர்ந்தவர் என்றுதான் பார்க்கிறார்கள். இசையமைப்பாளர் கங்கை அமரனாகப் பார்க்கவில்லை. இதில் எனக்கு மனவருத்தம் இருக்கிறது.
இவ்வாறு கங்கை அமரன் கூறினார்.