என் மீது பொய் வழக்கு.. அதிமுகவை எதிர்த்து போட்டி .. சீமான் அறிவிப்பு
மதுரை: சோதனைச் சாவடியில் கலாட்டாவில் ஈடுபட்டதாக என் மீது போலீஸார் போட்டது பொய் வழக்கு. வரும் சட்டசபைத் தேர்தலில் நான் அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளையும் எதிர்த்து 234 தொகுதிகளிலும் எனது கட்சியை போட்டியிட வைப்பேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
மதுரை மேலூர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சீமான் தகராறில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது போலீஸார் வழக்குப் போட்டனர்.
இந்த வழக்கில் சீமான் மீது புகார் கொடுத்ததாக கூறப்பட்ட அமீத் குமார் என்ற இந்திக்கார சோதனைச் சாவடி ஊழியர் தான் அப்படி ஏதும் புகார் கொடுக்கவில்லை என்று நீதிபதி முன்பு நேற்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி சீமானை கோர்ட் ஜாமீனில் செல்ல அனுமதித்தது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் சீமான். அப்போது அவர் கூறியாதவது...:
இது பொய் வழக்கு
என் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு. புகார் தாரரே புகார் கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.
என் சொந்தப் பிரச்சினை
இது என் சொந்த பிரச்சனை. இதுக்காக மக்கள் யாரும் போராடவேண்டாம். நானே சரி செய்துகொள்கிறேன். மக்கள்
பிரச்சனைகளை மட்டும் தொடர்ந்து பேசுவேன்.
அதிமுகவை எதிர்ப்பேன்
2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஆளுங்கட்சி அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடும்.
பழிவாங்குகிறதா அதிமுக....
அதிமுக பழிவாங்குகிறதா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை.
தை முதல் நாள்தான் புத்தாண்டு
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவோம். 7 நாள் திருநாளாக கொண்டாடுவோம் என்று அவர் கூறினார்.
அதிமுகவை எதிர்த்துப் போட்டி என்று அறிவித்துள்ள சீமான், கூடவே, திமுக அரசால், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டதை கொண்டாடுவோம் என்று கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.