ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது.. எடப்பாடியார் அதிரடி!
ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவை: ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தினகரன் இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். எப்படியாவது ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என அவர் தினகரன் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளார்.
இதற்காக முதல்வர் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் , அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை வளைக்கும் பணியிலும் தினகரன் ஈடுபட்டுள்ளார். இன்று எம்எல்ஏவாக பதவியேற்ற அவர், இன்னும் 3 மாதத்தில் இந்த ஆட்சி முடிந்துவிடும் என்றார்.
வேண்டுமென்றே வீண்பழி
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிலர் வேண்டுமென்றே அதிமுக அரசு மீது வீண் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர் என அவர் குற்றம்சாட்டினார்.
பதில் கூற முடியாது..
பாஜக கூட்டணி குறித்து அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வரும் நிலையில் அதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வருவதற்குள் கூட்டணி குறித்த கற்பனை கேள்விக்கு பதில் கூற முடியாது என்றார்.
ஆயிரம் தினகரன் வந்தாலும்
மேலும் தினகரன் ஆட்சி கவிழும் என பேசி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர், இதுபோல் ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது என்று கூறினார்.
குருமூர்த்தியே மறுப்பு
மேலும் ஆடிட்டர் குருமூர்த்தி டிவிட் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தரக்குறைவான கருத்து தெரிவிக்கவில்லை என குருமூர்த்தியே மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.
ரஜினி கட்சி தொடங்கினால்
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும் செய்தியாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார். ரஜினி கட்சி தொடங்கினால் அதுபற்றி பேசலாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.