கனமழை பெய்தால் வடசென்னைக்கு ஆபத்தாம்... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது கனமழை பெய்தால் வடசென்னைக்கு ஆபத்து என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால் வடசென்னைக்கு ஆபத்து ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை மணியை அடித்துள்ளனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையே வெள்ளத்தில் தத்தளித்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அடையாறு ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதனால் ஈக்காடுதாங்கல், அம்பாள் நகர் உள்ளிட்ட இடங்களில் முதல் தளம் மூழ்கும் ளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
Recommended Video

மேலும் முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளக் காடாக காட்சியளித்தன. இதனால் பெரும்பாலான மக்கள் பலநாட்கள் மின்சாரம், உணவு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

படகுகளில் மிதந்தனர்
பலர் படகுகளில் மிதந்து சென்று தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்துவிட்டு சென்னையில் நிலைமை சீரானது வந்தடைந்தனர். சென்னை விமான நிலையமும் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த சம்பவங்களை யாரும் மறக்க முடியாது.

மழை இல்லை
இதேபோல் கடந்த ஆண்டும் ஏற்படுமோ என்று மக்கள் பீதியில் உறைந்தனர். ஆனால் சாதாரண மழைக்குக் கூட வழியில்லாமல் போனது. இதனால் கடும் வறட்சி நிலவியது. ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டதால் மக்கள் குடிநீருக்காக வீதி வீதியாக அலைந்தனர்.

இந்த ஆண்டு என்னவாகும்
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பத்திலேயே அசத்தலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இந்த ஆண்டு கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு பெய்தால் வடசென்னைக்கு ஆபத்து ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் வெளியேற வழியில்லை
எண்ணூர் பகுதியில் உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் மழைநீர் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால், கனமழை பெய்யும் போது வடசென்னை பகுதிகளான அத்திப்பட்டு, தாழங்குப்பம் போன்றவை வெள்ளக் காடாக மாறும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

வெளியேற வழியில்லை
ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொட்டப்பட்டிருக்கும் சாம்பல் கழிவுகளை அகற்ற பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், தற்போது வரை அதை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய புகாராக இருக்கிறது. மேலும், கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தையும், தூர்வாராமல் இருப்பதால், வடசென்னை பகுதியில் இருந்து வெள்ள நீர் வெளியேறி கடலில் கலக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.

ஆட்சியர் நடவடிக்கை
எண்ணூரில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றப்படும் என்று ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். ஆனால் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்
அவை எப்போது அகற்றப்படும் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications