புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் கடைசி ஆசை... கண்ணீருடன் நிறைவேற்றிய இளையராஜா!
சென்னை: புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கடைசி ஆசையை கண்ணீருடன் நிறைவேற்றி வைத்தார் இசைஞானி இளையராஜா.
அந்த நோயாளியின் பெயர் ஆர் எஸ் ரவிச்சந்திரன். சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர். தாய், தந்தை இறந்துவிட்டதால் 44 வயதாகியும் திருமணமாகவில்லை.

உறவினர்கள் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். தினக்கூலியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். செயின் ஸ்மோக்கர் எனும் அளவுக்கு புகைப் பழக்கம் உள்ள இவருக்கு கேன்சர் நோய் தாக்கியுள்ளது.
அவரை பலகட்ட பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பதை கண்டுபிடித்தனர். ரவிச்சந்திரன், மரணத்தின் வாசலில் இருப்பதை அவரது உறவினர்களிடம் சொன்ன டாக்டர்கள் அவர் ஆசைப் பட்டதை நிறைவேற்றி வையுங்கள் என்று கூறினர்.

ரவிச்சந்திரனிடம் உறவினர்கள் அவரது ஆசையை கேட்க, தீவிர இளையராஜா ரசிகரான அவர் ஒரே ஒரு முறை இளையராஜாவைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் இளையராஜாவிடம் அவரது உதவியாளர் மூலம் சொல்லப்பட, அவரும் உடனே வரச்சொல்லுங்கள் என்று கூறினார்.
அதன்படி ரவிச்சந்திரனை அவரது உறவினர்கள் இளையராஜா இசையமைக்கும் பிரசாத் ஸ்டூடியோவிற்கு அழைத்துச் சென்றனர்.

ரவிச்சந்திரனைப் பார்த்த இளையராஜா அவருக்கு ஆறுதல் கூறி, கனிவுடன் விசாரித்தார். பாசத்தோடு விசாரித்தார். அப்போது ரவிச்சந்திரன், ‘‘எனக்கு சாமியே நீங்கதான் அய்யா.. உங்க பாடலைக்கேட்காமல் நான் ஒரு நாளும் இருந்ததில்லை. எனக்கு இது போதும்," என்று என்று சொல்லி கலங்கி அழ, அவரை அணைத்துக்கொண்ட ராஜாவும் கலங்கிவிட்டார். கொஞ்ச நேரம் எதுவும் பேச முடியாதவராகிவிட்டார் ராஜா.
இது அங்கிருந்த அத்தனைப் பேரின் கண்களையும் கலங்க வைத்துவிட்டது.












Click it and Unblock the Notifications