சில்லறை மூட்டையுடன் வந்த சுயேட்சை .. அப்படியே "ஷாக்" ஆன தேர்தல் அதிகாரி!
சென்னை: வில்லிவாக்கத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான கந்தசாமி வேட்புமனு தாக்கல் செய்ய டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்தை சில்லறை மூட்டையாக கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை துவங்கியது. வேட்பாளர்கள் வரும் 29ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்நிலையில் நேற்று பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுபவர் எஸ்.விகடகவி (எ) கந்தசாமி. அவர் நேற்று காலை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட செனாய் நகரில் இருக்கும் தேர்தல் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.
அவரது கையில் சிவப்பு நிற சிறிய மூட்டை இருந்ததை பார்த்த தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் தேர்தல் அதிகாரி குமரவேல் பாண்டியின் மேஜை மீது அந்த மூட்டையை வைத்து அவிழ்த்தார். மூட்டையில் டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரம் சில்லறையாக உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் அந்த மூட்டையில் இருந்த சில்லறையை எண்ணிப் பார்த்து ரூ.10 ஆயிரம் இருப்பதாக தெரிவித்தனர். கந்தசாமி சில்லறை மூட்டையுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.